Tuesday, December 16, 2014

QUIRKS OF FATE


விதியின் விளையாட்டு





விதி என்பது எப்படி எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பது 
நினைப்பதற்கே விந்தையாகவும் விசித்திரமாகவும் அற்புதமாகவும் இருக்கும். 
இரண்டாம் உலக யுத்தத்தின்போது நடந்த சில நிகழ்ச்சிகளை 
ஏற்கனவே அகத்தியரில் எழுதியிருக்கிறேன். 

போலந்தின் தலைநகர் வார்ஸாவில் யூதர்கள் வசித்த கெட்டோ 
என்னும் சேரியிலிருந்து 1940-ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கானவர்களை 
ஜெர்மன் புயல் படையினர் கைது செய்து கொண்டுபோய் பல இடங்களில் 
உள்ள கூட்டுச்சிறைகளில் அடைத்துவைத்தார்கள். அந்த ஆறாண்டுகளில் 
அறுபது லட்சம் யூதர்கள் அழிக்கப்பட்டுவிட்டனர். வார்ஸாவில் அவர்கள் 
கைதாக்கப்பட்டு நடத்திச்செல்லப்படும்போது படம் எடுத்திருக்கிறார்கள். 
அதில் ஒரு சிறுவன் - ஆறு வயதுக்குள் இருக்கும்- தன் சிறிய கைகளை 
ஸரெண்டர் முத்திரை காட்டி, தூக்கிச்செல்வதை அந்தப் படத்தில் 
காணலாம். 
அறுபது லட்சம் பேர் மாண்டிருக்கின்றனர். 
அந்தச் சிறுவன் யுத்தம் முடியும்போது உயிருடன் இருந்தான். 

1944-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6-ஆம் தேதியை D-Day என்று 
அழைப்பார்கள். அந்தத் தினத்தன்று ஒன்பதாயிரம் கப்பல்களில் இரண்டு 
லட்சம் போராளிகள் ஆயிரக்கணக்கான டாங்க்குகள் போன்ற 
சாதனங்களுடன் நாட்ஸி ஜெர்மானியர் கையிலிருந்த பிரான்ஸ் நாட்டில் கரையிறங்கினார்கள். 

வரலாற்றிலேயே மிகவும் உக்கிரமாக நடைபெற்ற போர்களில் 
அதுவும் ஒன்று. 
அந்தப் போரின் ஆரம்பக் கட்டத்திலேயே சில ஜெர்மன் படை
வீரர்கள் பிடிபட்டனர். 
      
அவர்களில் சில கொரியாக்காரர்கள் இருந்தனர். அவர்களைப் 
பிடித்த அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சி. ஏனெனில் கொரியாக்காரர்கள் அங்கிருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை. அந்தக் கால 
கட்டத்தில் கொரியா ஜப்பானின் காலனி நாடாக அடிமைப்பட்டுக் 
கிடந்தது. ஜப்பானியர்களின் இம்ப்பீரியல் ஜப்பனீஸ் படையில் லட்சக்கணக்கான கொரியர்கள் இருந்தனர்.
அவர்கள் நாட்டிலிருந்து எண்ணாயிரம் மைல்களுக்கு அப்பால் ஜெர்மன் வெய்ர்மா·க்ட் படையின் யூனி·பார்ம் அணிந்துகொண்டு 
கொரியர்கள் பிரான்ஸ் நாட்டின் நார்மண்டிக் கரையில் என்ன 
செய்கின்றனர்?
விசாரணை செய்யும்போது அவர்களின் கதை தெரிந்தது.

1936-ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவின் வடபகுதியாக இருந்த 
மஞ்சூரியாவைப் பிடித்தது. அது ரஷ்யாவின் எல்லைப்புறம். ரஷ்யாவுடன் அந்தச் சமயத்தில் மோதல் ஏற்பட்டது. மஞ்ச்சூரியாவுக்கு ஜப்பான் 
அனுப்பிய படையில் இந்தக் கொரியர்கள் இருந்தனர். ரஷ்யப்படையிடம் அவர்கள் பிடிபட்டனர். 
ஜெர்மனி ரஷ்யாவின்மேல் திடீரென்று படையெடுத்து வெற்றி மேல் வெற்றி பெற்றது. ரஷ்யர்களுக்கு ஆள் சேதம் அதிகம்.
      அப்போது ரஷ்யர்களுக்கு ஆள் பலம் வேண்டியிருந்ததால் 
ரஷ்யப்படையில் மேற்படி கொரியர்களைச் சேர்த்து ஜெர்மானியர்களுக்கு எதிராகப் போரிட வைத்தனர். 
      அவ்வாறு அவர்கள் போரிட்டபோது ஜெர்மானியரிடம் பிடிபட்டனர். அவர்களை என்ன செய்வது என்று ஜெர்மானியர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஜப்பானியப் படையில் இருந்தவர்கள். ரஷ்யர்களிடம் 
பிடிபட்டதனால் ரஷ்யப் படையில் சேர்ந்து போரிடுமாறு ஆணையிடப் பட்டனர். அதன் பின்னர் ஜெர்மனியிடம் பிடிபட்டனர். 

அந்தச் சமயத்தில் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி பின்வாங்கிக்
கொண்டிருந்தது. ஸ்டாலின்கிராடு முதலிய பல இடங்களில் லட்சக்கணக்கான ஜெர்மன் போராளிகள் இறந்து போய்விட்டனர். 
இன்னும் பலர் காயமடைந்தனர். லட்சக்கணக்கானவர்கள் சரண
டைந்திருந்தனர். ஆட்சேதமும் பொருட்சேதமும் மிக அதிகம்.
      போதாததற்கு அமெரிக்கா, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஆகியவற்றின் 
படைகள் விரைவில் ·பிரான்ஸ் நாட்டில் கரையிறங்கவிருப்பதால் அங்கு படைகளை அதிகமாக அனுப்பவேண்டியிருந்தது. படைகளுக்கு ஆள்தேவை. ஒவ்வோர் ஆளும் தேவைதான். 
ஜப்பான் ஜெர்மனுக்கு நேசநாடு என்பதால் அந்தக் கொரியார்களை 
ஜெர்மன் படையில் சேர்த்துக்கொண்டனர்.
அவர்களின் ராசி அமெரிக்கப் படையினரிடம் சிக்கிக்கொண்டனர். 

அதன் பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் எனபது தெரியவில்லை. 
     
       இப்படியும் இருக்கலாமோ?

1945-இல் ஜப்பான் சரணடைந்துவிட்டது. 
கொரியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 

ரஷ்யா/சீனாவின் ஆதிக்கத்தில் வடகொரியா; அமெரிக்காவின் 
ஆதிக்கத்தில் தென்கொரியா. 
நம்ம கொரியாக்காரர்கள் தென்கொரியாப் படையில் சேர்க்கப்பட்டு 
சண்டையிட்டிருக்கலாம். 
அப்போதும் விதி விடாமலிருந்திருக்கும்.
வடகொரியா/சீனா படையிடம் அவர்கள் சிக்கியிருக்கலாம்.

சீனா படைகள் அருணாசல் அல்லது லடாக்கில் சண்டையிட்ட
போது அவர்கள் சீனப்பட்டாளத்தில் சேர்ந்து சண்டையிட்டிருக்கலாம். 
அப்போது இந்தியாவிடம் சிக்கியிருக்கலாம்.
அத்துடன் அவர்கள் ரிட்டயர் ஆகிவிட்டிருப்பார்கள். 
1936-இலிருந்து 1962-வரைக்கும் 26 ஆண்டுகள். 
ரிட்டயர்மெண்டு ஏஜ்தான். 
இந்தியாவில் எங்காவது செட்டில் ஆகிவிட்டிருப்பார்களா 
என்று தேடிப்பார்க்கலாம். 
       யார் கண்டது?
       அண்ணாநகர் காலனியில் கூர்க்காவாகக்கூட வேலை 
பார்த்திருக்கலாம்.
       சத்தியராஜே கூர்க்கா வேஷம் போடும்போது இவர்களுக்கென்ன? 
அசப்பில் பார்க்கும்போது இவர்களும் கூர்க்கா மாதிரியேதான் 
இருப்பார்கள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday, November 19, 2014

THE TELUGU CHOLZAS


தெலுங்கு சோழர்கள்

ரொம்ப நாளாக நான் எழுதவேண்டும் என்று நினைத்த விஷயங்களில் ஒன்று தெலுங்கு சோழர்கள் பற்றியது.
சங்க காலச் சோழர்களில் மிகவும் புகழ் வாய்ந்தவர் கரிகால் 
பெருவளத்தான் என்னும் கரிகால் சோழர். இவர் கிமு 200-இல் இருந்தார் 
என்ற பொதுவான கருத்து ஆராய்ச்சியாளர்களிடையே உண்டு. 
வடநாடுகளை நோக்கிப் படைகளை அனுப்பி, இமயமலை வரைக்கும் 
சென்று அங்கு சோழர்களுடய புலி இலச்சினையைப் பொறித்தார். செல்லும் வழியில் உள்ள நாடுகளையும் வென்றிருப்பார். எந்தெந்த நாடுகளை வென்றார் என்பதற்கு ஒன்றும் தகவல்கள் இல்லை. 
ஆனால் ஒன்று. 
பிற்காலத்தில் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் சோடர் என்னும் 
மரபினர் ஆண்டு வந்தனர். அவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மரபினர் இருந்தனர். அவர்கள் அனைவருமே தங்களைக் கரிகால் சோழரின் 
பரம்பரையினர் என்றே சொல்லிக்கொண்டனர்.
இவர்கள் கிருஷ்ணை ஆற்றுப் பிரதேசங்கள், நெல்லூர், கடப்பை 
முதலிய வட்டாரங்களில் சிறு சிறு நாடுகளை ஆண்டுகொண்டிருந்தனர். 
கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாவது இவர்கள் இந்தப் பிரதேசங்களை ஆண்டு வந்திருக்கின்றனர். 
விஜயாலயன் மரபினர் ஆண்டு வந்த சோழசாம்ராஜ்யத்தின் கீழ் 
சிற்றரசர்களாக இந்த மரபினர் அனைவருமே  விளங்கினர். அதுவும் 
சாளுக்கிய சோழராகிய முதலாம் குலோத்துங்க சோழர், சோழ 
சாம்ராஜ்யாதிபதியாகிய பின்னர் தம்முடைய உரிமை நாடாகிய வேங்கி 
நாட்டை ஒரு தெலுங்கு சோடரிடம் ஒப்படைத்தார். அங்கு படையெடுத்த மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிராக தெலுங்கு சோடர்களுக்குக் 
குலோத்துங்கர் பெரும்படையை அனுப்பி உதவினார். 
"மரபினர் மரபினர்" என்று பன்மையில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். 
எத்தனை மரபுகள்?

இவர்களில் ரொம்பவும் முக்கியமானவர்கள் வேலணாண்டி சோடர்கள்.
கிபி 1076-இலிருந்து கிபி 1216 வரைக்கும் அவர்களுக்குத் 
தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது. 
இவர்கள் குண்டூரை ஆண்டவர்கள். பின்னர் வேங்கியில் இருந்தனர் அதன் பின்னர் பித்தாபுரம் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். 
அந்த காலகட்டத்தில் ஆண்ட ஏழு வெலணாண்டி சோழ மன்னர்களில் மூன்று பேர் ராஜேந்திர சோழன் என்ற பெயரை வைத்திருந்தனர். 
பிற்காலத்தில் பாண்டியர்களுக்கும் காக்கத்தீயர்களுக்கு ஏற்பட்ட 
போர்களில் இவர்கள் ரொம்பவும் அடிபட்டனர். முடிவில் காக்கத்தீயப்
பேரரசில் இவர்கள் நாடு அடக்கப்பட்டுவிட்டது.

தெலுங்குச் சோழர்களில் இன்னொரு மரபினர் ரேணாண்டுச் சோடர். தற்காலக் கடப்பை மாவட்டத்தை ஆண்டனர். ஆரம்ப காலத்தில் 
தனியாட்சியுடன் இருந்தார்கள். பின்னர் கீழைச் சாளுக்கியர்களுக்கு 
அடியில் இருக்கலானார்கள். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பழந்தெலுங்கு 
மொழியிலேயே தங்களுடைய கல்வெட்டுக்கள் அனைத்தையும் 
முதன்முதலாக எழுத ஆரம்பித்தனர்.

இன்னொரு முக்கியமான மரபு பொத்தப்பிச் சோழர்கள். கடப்பை 
வட்டாரத்தில்தான் இவர்களும் ஆட்சி நடத்தினர். பின்னர் சித்தூர் 
மாவட்டம் வரைக்கும் அவர்கள் ஆட்சி பரவியது. 

ரேணாண்டு சோழர்களுக்குக் கிளை மரபினர் இருந்தனர். அவர்கள் 
கோனிடேன சோழர்கள் எனப்பட்டனர். குண்டூரில்தான் இவர்களும் 
ஆட்சி புரிந்தனர். சில சமயங்களில் தன்னாட்சியுடன் இருந்தனர். மற்ற சமயங்களில் ரேணாண்டு சோழர்களின் கீழ் ஆட்சி புரிந்தனர். பிற்காலத்தில் காக்கத்தீயப் பேரரசர் கணபதி ரேணாண்டு சோழர்களுடன் கோனிடேன மரபினரையும் தம்முடைய சிற்றரசர்களாக ஆக்கிக் கொண்டார். 

இன்னும் ஒரு மரபினரும் இருந்தனர். நன்னூரு சோழர்கள் என்னும் இவர்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை. 

இன்னொரு முக்கிய மரபு நெல்லூர் சோடர்கள். சோழ பிஜ்ஜனா என்பவர்தான் இந்த மரபில் முதலாவதாக அறியப்படுபவர். இவர்கள் மேலைச் சாளுக்கியர்களின் சிற்றரசர்களாக இருந்தனர். பக்கநாடு என்னும் பகுதியை ஆண்டுவந்தனர்.
திக்க சோடர் என்பவர் கிபி 1223-இல் ஆண்டவர். அவர் தம்முடைய படைகளைத் தெற்கு நோக்கிச் செலுத்தி காவிரிக் கரை வரைக்கும் 
நாட்டைப் பிடித்துக்கொண்டார்.

அவர்கள் சோழப்பேரரசுக்குப் பெயரளவில் கட்டுப்பட்டவர்கள். 
ஆனால் சுதந்திரமாகத்தான் ஆட்சி புரிந்தனர். ஏனெனில் அப்போது 
சோழப் பேரரசராக இருந்த மூன்றாம் ராஜராஜ சோழர் பாண்டிய நாட்டின் 
மாறவர்மர் சுந்தர பாண்டியரால் இருமுறை தோற்கடிக்கப்பட்டார். 
பாண்டியநாடு சுதந்திரம் பெற்றது. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு 
மைசூரிலிருந்து ஹோய்சளப் பேரரசர் வீரநரசிம்மர் தம்முடைய 
படைகளைக் கொண்டு பல்லவ கோப்பெருஞ்சிங்கன், சுந்தர பாண்டியர், 
அனியங்க பீமச் சோடர் ஆகியோர் அடங்கிய கூட்டணியை வென்று 
மூன்றாம் ராஜராஜ சோழரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார். 

ஹோய்சள வீரநரசிம்மரின் மகன் சோமேஸ்வரர் பாண்டியர்களுடன் 
சேர்ந்துகொண்டு அடுத்து வந்த மூன்றாம் ராஜேந்திர சோழரைத் தாக்கினார். 
இம்முறை தெலுங்குச் சோட திக்கர் ராஜேந்திர சோழருக்கு 
உதவியாகத் தம் பெரும்படைகளுடன் வந்து ஹோய்சளரையும் 
பாண்டியரையும் தாக்கி வென்றார். ஆனால் தொண்டை மண்டலத்தைத் தமக்கே வைத்துக்கொண்டார். 
அத்துடன் தமக்கு 'சோழ ஸ்தாபனாச்சார்யன்' என்ற விருதுப் பெயரையும் சூட்டிக்கொண்டார். 
ஆனால் திக்க சோடரின் மகன் மனுமசித்தியின் காலத்தில் நெல்லூர் 
சோடர்கள் வலுவிழந்தனர். 

கிபி 1260-இல் மனுமசித்தி சோடருக்கும் எர்ரகடபாடு நாட்டுச் 
சிற்றரசர் கட்டமராஜுவுக்கும் இடையே மிகக் கடுமையான பூசல் 
ஏற்பட்டது. 
காரணம்? 
அந்த வட்டாரத்தில் பசுமையான பெரிய மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. இவை யாருக்கு உரிமையானவை என்பதில் பூசலும் மோதலும் ஏற்பட்டன. அந்தப் பெரும்போரில் மனுமசித்தி வென்றாலும் அவருடைய முக்கிய தளபதி இறந்துபோனார். இந்தப் போரால் நாடு பெரும் சேதத்தை அடைந்தது. இதனால் மனுமசித்திச் சோடர் இறந்து போனார். 

மனுமசித்திச் சோடரின் இறப்புக்குப் பின்னர் நெல்லூர் நாடு தன்னுடைய தனித்தன்மையை இழந்தது. பிற்காலப் பாண்டியர்களுக்கும் காக்கத்தீயப் பேரரசுக்கும் இடையே நடந்த போர்களின் களமாக விளங்கியது. அடிக்கடி கைமாறியது. கடைசியில் காக்கத்தீயப் போரரசுக்குள் கரைந்துவிட்டது. 

ஏன் இந்தத் தெலுங்குச் சோடர்களைப் பற்றி எழுதினேன் என்றால், 
கிபி 1076-இலிருந்து கிபி 1248 வரைக்கும் 172 ஆண்டுகள் சோழப் 
பேரரசர்கள் எழுவரின் ஆட்சியில் ஸ்திரத்தன்மை விளங்குவதற்கும் அந்த சோழர்கள் நிம்மதியாக ஆட்சி புரிவதற்கும் இந்தத் தெலுங்குச் சோடர்கள் பெரும்பங்கு வகுத்தனர். அவர்கள் இல்லையெனில் சோழப் பேரரசு நீடித்து இருந்திருக்கமுடியாது. 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$






Saturday, November 15, 2014

SATHTHABANGGI


இராமச்சந்திர கவிராயரின் சத்தபங்கி

படத்தைப் பெரிதாக்க இமேஜின் மீது க்லிக் செய்யவும்.







$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, September 19, 2014

FAITH OVER MATTER


"தீக்குள் விரலை வைத்தால்......"

தமிழன்பன் எழுதிய 'என்னைச் செதுக்கிய சிற்பிகள்' என்னும் சிறு நூலிலிருந்து........ 

------------------------------------------------------------------------------------------- 
 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday, September 3, 2014

BESUT WEAPONS



பெஸுட் வட்டாரத்தில் வழங்கும் ஆயுதங்கள் 


கராம்பிட் எனப்படும் புலிநகம்




காப்பாக் கெச்சில்



காப்பாக் கெச்சில் பிடிக்கும் முறைகளில் ஒன்று



என்னுடைய அலங்கார காப்பாக் கெச்சில் -
வெண்கலத்தால் ஆனது



பாண்டிய இளவரசருடைய சின்னங்கள் -
கண்டரகோடரியும் யானையும்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Saturday, August 23, 2014

THE TAMILIAN PARADIGM

தமிழர்களின் பாரடைம் 

பாரடைம் சிட்டுவேஷன் எனப்படும் சில உதாரணங்களைப் பார்ப்போம். 
சில ஆண்டுகளுக்கு முன்னர் - 1990-களின் பின்பாதியில் மலேசியாவில் 
ஒரு பெரிய பொருளாதார Boom Period இருந்தது. ஏராளமான தொழிற்சாலைகள். 
அப்போதிருந்த விலைவாசிக்குத் தக்க சம்பளம். ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் தொழிற்சாலைகளில் வேலை செய்தால் - ஓவர்டைமெல்லாம் சேர்த்து - ஐயாயிரம் ரீங்கிட்டுக்கு மேல் சம்பாதிக்க முடிந்தது. 
அப்போது இன்ஷ¥ரன்ஸ் தொழில் ஒரு பிடிபிடித்தது. இன்ஷ¥ரன்ஸ் 
தொழிலால் கோடீஸ்வரனாக முடியும் என்ற ஒரு மனப்பிராந்தியை இன்ஷ¥ரன்ஸ் தொழிலின் மகாகுருமார் அப்போது தோற்றுவித்து
விட்டனர்.
இன்னொரு பக்கம் மோட்டிவேஷனல் குருமார். அவர்கள் கொடுக்கும் 
மோட்டிவேஷனல் பயிற்சியால் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தினார்கள். 
இன்ன கற்களை அணிந்துகொண்டால் வாழ்க்கையில் வெற்றியைத் தவிர வேறு எதுவும் இருக்காது என்று இன்னொரு பக்கம். 
இன்ன ஹோமத்தைச் செய்தால் வானத்தையே வில்லாக வளைக்கலாம் என்பது மற்றொரு பக்கம். 
பெரும்பணத்தைச் செலவிட்டு, நிறையப் பொருள்களை நெருப்பில் போட்டு, டன் கணக்கில் நெய்யை ஊற்றி, பல சிக்கலான சடங்குகளுடன் நீண்ட நேரத்துக்கு ஆடம்பரமாகச் செய்யப்படும் ஹோமங்களும் பூஜைகளும் அபிஷேகங்களும் மட்டுமே தெய்வ அருளை மிக அதிக அளவில் விரைவில் பெற்றுத்தரமுடியும் என்று மக்கள் நம்ப வைக்கப் பட்டனர். 
அது ஒரு Sure-fire Method என்று மக்கள் நம்பவைக்கப்பட்டனர். 
அவர்கள் சொன்ன அந்த Sure-Fire, அவர்கள் போட்டுவைத்த பெரும் 
ஹோமகுண்டத்தில்தான் இருந்தது என்பதை மக்கள் உணரவில்லை.

கோயில்களால் பக்தி வளர்கின்றது என்ற நம்பிக்கை ஒரு பக்கம்.
இவற்றையெல்லாம் நம்பிக்கொண்டு ஒருவிதமான சொகுசான உணர்வுடன் திருப்தியாகப் பெரும்பான்மையான மலேசியத் தமிழர்கள் இருந்துவந்தார்கள். 
இதே மாதிரியான இன்னும் பல நம்பிக்கைகள். 
இவையெல்லாமே சிலவகையான பாரடைம்களை பெரும்பான்மையான மலேசியத் தமிழர்களிடையே தோற்றுவித்தன.
இவர்களில் பலர் எதையும் அதிகமாகவோ ஆழமாகவோ சிந்திப்பதுமில்லை. 
வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவது என்ற கோட்பாடு அவர்களிடம் வேறூன்றி விட்டது. அதற்குள் பெரும்பணத்தைச் சம்பாதித்துக்கொள்வது; வசதிகளைத் தேடிக்கொள்வது; அடுத்தவனைக் கெடுப்பது; ஏமாற்றுவது போன்றவற்ரைக் கைக்கொள்ளுதல்.
சமஸ்கிருதத்தில் 'மௌட்டீகம்' என்றொரு சொல் இருக்கிறது. 
இந்தச் சொல்லை நான் முதன்முதலில் அறிந்துகொண்டது சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத்திடமிருந்து. 
ஈ.வெ.கி.சம்பத் என்பவர் சுயமரியாதை இயக்கம், திராவிடக் கழகம், 
திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். 
தமிழ் தேசியக்கட்சி என்னும் கட்சியை இன்னொரு மூத்த தலைவராகிய நாவலர் நெடுஞ்செழியனுடன் சேர்ந்து ஆரம்பித்து, பிற்காலத்தில் காங்கிரஸில் சேர்ந்துவிட்டார். 
அருமையான குரல் வளம்; அற்புதமான சொல்லாற்றல்; ஆற்றொழுக்கான பேச்சு. சம்பத்துடைய பேச்சில் அதிகம் அடுக்கு மொழிகள் இருந்ததில்லை. 
அவருடைய தந்தையார் ஈவெ கிருஷ்ணசாமி நாயக்கர்.
தந்தை பெரியாருடைய அண்ணன்.
1927-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுயமரியாதை இயக்கத்துக்கு ஆதரவு தேடுவதற்காகவும் 'விடுதலை' பத்திரிக்கைக்கு சந்தா சேர்ப்பதற்காகவும் மலாயா வந்திருந்தார். 
என்னுடைய தந்தையார் சின்னமுத்து பிள்ளையும் அவருடைய அண்ணன் பெரியையா பிள்ளையும் அவரை இந்தோனீசியாவுக்கு வரவழைத்தனர். அங்கு என்னுடைய தந்தையார் 45 சந்தாக்களை இரண்டே நாட்களில் சேர்த்துக் கொடுத்தார். சில உரைகளையும் ஆற்றச்செய்தார்.
கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில்தான்.
அப்போதெல்லாம் சுயமரியாதை இயக்கத்தினரை பிராமணர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் 'சூனா மானா' என்றுதான் குறிப்பிடுவார்கள். 

அவர்கள் எந்த அர்த்தத்தில் 'சூனா மானா' என்று குறிப்பிட்டார்கள் 
என்பதை ஊகிக்கக் கால்க்யுலஸ் போட்டுப் பார்க்கவேண்டியதில்லை. 

ஈவெகி சம்பத்தை நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன். அவரைச் சந்திப்பதற்குத் தந்தையார் கூட்டிச் சென்றிருந்தார். 
அவர் ஆற்றிய உரையின்போது அவர் 'மௌட்டீகம்'  என்ற சொல்லைப் பயன்படுத்தினார். 
அதைப்பற்றி கேட்டபோது அதற்கு அவர் சுருக்கமான விளக்கம் சொன்னார்.
இப்போது அந்தச் சொல்லுக்கு அர்த்தத்தை என்னிடம் கேட்டால் நான் இப்படித்தான் சொல்வேன். 
"மூடத்தனம், முட்டாள்த்தனம், கேணத்தனம், கொங்காத்தனம், 
கோணங்கித்தனம், தெங்கணத்தனம், பேக்குத்தனம், பேமானித்தனம், 
ஏமாளித் தனம், கோமாளித் தனம், சொங்கித்தனம், அசட்டுத்தனம், அசமந்தம், புரியாத்தனம், போன்ற தன்மைகள் அனைத்துமே ஒன்று சேர்ந்தால் ஏற்படும் தன்மைதான் 'மௌடீக்கம்' என்பது.

ஆதிசங்கரர் பாடிய 'பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே" என்பதில் உள்ள 'மூட' என்னும் சொல்லிலிருந்து தோன்றியதுதான் 'மௌட்டீகம்'.

                                        $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, July 24, 2014

Saturday, May 24, 2014

UNWANTED SPECIAL KNOWLEDGE


வேண்டப்படாத அரிய தகவல்


கோலாலும்பூர் பத்து மலை



மலேசியாவின் முக்கிய முருகன் தலங்களில் ஒன்றாக உள்ளது 
கோலாலும்ப்பூரின் பத்து மலை - Batu caves. 
'Batu என்றால் மலாய் மொழியில் 'பாறை' அல்லது 'கல்'. 
அது ஒரு பெரிய சுண்ணாம்புப் பாறை- limestone; அதுதான் குன்றாக 
நிற்கிறது.
பன்னெடுங்காலமாக அந்த குன்றின்மீது விழும் மழை, படியும் பனி 
ஆகியவை எப்போது வடிந்துகொண்டேயிருக்கும்.
அதன் காரணத்தால் பெரும் பெரும் துளைகள், துவாரங்கள், குகைகள், குடம்புகள், stallagmites, stallagtites ஆகியவற்றைக் காணலாம். 
18-ஆம் நூற்றாண்டில் அந்தக் குன்றில் உள்ள பெரிய குகையொன்றில் முருகனை வழிபடலாயினர். 
அந்த வழிபாடு நாளடைவில் மிகச்சிறப்புப் பெற்றுவிட்டது. இப்போது தைப்பூசத்தின்போது பத்து லட்சத்துக்கு மேல் மக்கள் கூடும் விழா அங்கே 
நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பால்குடங்களும் காவடிகளும் அங்கு எடுக்கப்படுகின்றன.
சாதாரண நாட்களிலும்கூட அது ஒரு முக்கியமான பயணிகள் கேந்திரமாக விளங்குகிறது. 
2001-ஆம் ஆண்டில் ஒருநாள். அது ஒரு விசேடமான நாள். அந்த நாளன்று ஒரு குறிப்பிட்ட நேரம் அதி முக்கியமானது. 
அதை எத்தனையோ ஆண்டுகள் பஞ்சாங்கங்களைப் பார்த்தும் வான 
சாஸ்திரக் கணக்குகளையும் போட்டு செய்த கண்டுபிடிப்பு.
ஆகவே அன்று பத்துமலைக்குச் சென்றிருந்தேன்.
அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே அங்கு சென்றுவிட்டோம். 
தாகசாந்தி செய்துகொள்ளலாம் என்று அங்கிருந்த ஹோட்டலில் தேநீர் அருந்தச்சென்றோம். அங்கு, பக்கத்து மேசையில் நான்கு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவ்வப்போது சில தமிழ்ப்பாட்டுக்களைச் சொல்லி 
ரசித்துக்கொண்டிருந்தனர். 
அங்கிருந்து வரும்பொது அந்த பெண்களிடம் அந்த தினத்தின் 
முக்கியத்துவத்தைச் சொல்லிவிட்டு வந்தேன். அவர்கள் நிமிர்ந்து பார்த்து
விட்டு, "அப்படியா?" என்றார்கள்.

அதன் பிறகு நாங்கள் படிகளில் ஏறி குகைக்குச் சென்றோம்.
அங்கு திரிந்த  தமிழர்களிடம் சொன்னால் எடுபடாது என்ற அச்சம். 
எடுபடக்கூடிய தமிழர்களாக அங்குள்ளவர்கள் தோன்றவில்லை. 
ஆகவே அங்கிருந்த இரண்டு வெள்ளைக்காரப் பெண்மணிகளிடம் 
சொன்னேன். 
முதல் பெண், நான் சொல்லச் சொல்ல நகர்ந்து பின்பக்கமாகப் போனாள். 
அடுத்தவள் பிரிட்டிஷ்காரி. கொஞ்சம் ஆர்வம் காட்டினாள். இன்னொரு 
ஜப்பானிய இளைஞனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டான்.

அதன்பின்னர் அங்கிருந்து திரும்பி வரும்போது, ஒரு கறுப்புப் பையைத் 
தோளில் தொங்கப்போட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சிறிய சிறிய 
பிளாஸ்ட்டிக் பைகளில் இருந்த ஏதோ பொருள்களை வருகிறவர் 
போகிறவர்களிடம் விற்றுக்கொண்டிருந்தான். 

கோயில் வாசலில் ஒரு நரிக்குறவன். அவன் வியாபார மும்முரத்தில் 
இருந்தான். செத்த நரியின்றின் மண்டைத்தோலை உரித்து விலக்கி, அதன் 
மண்டையோட்டில் நீட்டிக்கொண்டிருந்த முட்களைக் காட்டி, 'நரிக் 
கொம்பு'களை விற்றுக்கொண்டிருந்தான்.

அங்கிருந்து வரும்போது, கைரேகை ஜோதிடம் சொல்வதாக ஒருவர் 
அந்தப் பக்கத்தில் ஒரு ஸ்டாலில் ஒரு மேசையைப் போட்டுக்கொண்டு 
அமர்ந்திருந்தார். அவரிடம் கையை நீட்டிய ஓர் ஆளின் உள்ளங்கையைப் 
பார்த்துவிட்டு, அதனை இன்னும் நன்றாகப் பார்க்கவேண்டும் என்பதற்காக 
ஒரு பூதக்கண்ணாடியைத் தன்னுடைய கறுப்புத் தொங்கு பையிலிருந்து 
எடுத்தார்.
அவரின் இடத்தைத் தாண்டி நாங்கள் இளநீர் அருந்த ஸ்டாலுக்குச் 
சென்றோம். சற்று நேரத்தில் அந்த நரிக்குறவன் தோளில் ஒரு கறுப்புப் பையைத் தோளில் தொங்கப்போட்டுக்கொண்டு வியாபாரம் முடிந்து சென்று
கொண்டிருந்தான். 
அந்த அற்புதமான விஷயத்தை யாரிடமும் சொல்வதற்குக்கூட முடியவில்லையே. சொன்னாலும் கேட்பாரில்லை. புரிந்துகொள்ளக்கூடியவர்களிடம் 
மட்டும்தான் அதைச் சொல்லலாம். 
அடேயப்பா! எப்பேற்பட்ட விஷேமான விஷயம்!!!
எனக்கு மனதில் ஓர் அடி. 'என்னடாது. எவ்வளவு பெரிய விஷயத்தை 
இவர்களிடம் சொல்கிறோம். சற்றும் எடுபடவேயில்லையே?'

மனத்தாங்கலுடன் காரில் ஏறினேன்.
ஏறுமுன் என் தோளில் தொங்கிக்கொண்டிருந்த பையை - கறுப்புபையை - 
பின்ஸீட்டில் போட்டேன்.
திரும்பிச்சென்றேன்.

இப்போது பதின்மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த ஆண்டுக்கு உண்டான ஆந்த விசேஷ நாளும் சென்று விட்டது. 
இந்தப் பதின்மூன்று ஆண்டுகளில் யாரிடமும் அந்த விசேஷத்தைச் 
சொல்லவில்லை. சொல்லவும் தோன்றவில்லை

இப்போது Retrospection -இல் பார்க்கும்போது, அதைச் சொல்லாமல் 
விட்டது நல்லதுக்குத்தான். ஏனெனில் அதை வைத்து கமர்ஷியலைஸ் 
செய்துவிடுவார்கள். விழா நடத்துவார்கள். காவடி எடுப்பார்கள், பால்குடம் எடுப்பார்கள். யாராவது வீஐப்பீயை அழைத்துப் பரிவட்டம் கட்டுவார்கள். 

எனக்கும் அந்த மலையில் உள்ள சித்தர்களுக்கும் மட்டுமே 
தெரிந்ததாக இருக்கட்டும்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, May 15, 2014

13

13



பதின்மூன்றைப் பற்றிய பயத்தை Tridecaphobia என்று சொல்வார்கள். ஆனால் இந்த பயம் தெனாலியின் லிஸ்ட்டில் இல்லை. ("எல்லாம் சிவமெயம் எண்ட மாதிரி எனக்கு எல்லாம் பெயமெயம்").
Octophobia என்பது எட்டைக் குறித்த பயம். 
ஐரோப்பியர்கள் கிரிஸ்துவர்களாக மாறுவதற்கு முன்னர் ஷாமானிஸம், பேகனிஸம், கெல்த்திய மதம், நார்ஸ் மதம் போன்ற மதங்கள் இருந்தன.
பதின்மூன்று எண் பழைய கெல்த்திய, பண்டைய ஐரோப்பிய சமயத்தில் முக்கியமானதாக இருந்தது. 
பதின்மூன்றாம் நாள் முக்கியமான நாளாகவும் புனிதமான நாளாகவும் இருந்தது. 
கெல்த்திய சமயத்திலிருந்து கிரிஸ்த்துவ மதத்துக்கு ஐரோப்பியர்கள் 
மாறியபோது கெல்த்திய மத சம்பிரதாயங்களுக்கு பயங்கரமான 
தோற்றத்தையும் ஏற்படுத்தி, அவற்றைப் பற்றிய பயங்கரமான கருத்துக்களைப் பரப்பிவிட்டார்கள். அந்த மதத்தின் கூறுகளை Wiccaan, Witchcraft, Sorcery போன்றவற்றைச் சேர்ந்தவையாகக் கருதுமாறு ஏற்படுத்திவிட்டார்கள். இவையெல்லாம் மாந்திரீக வாதத்தைச் சேர்ந்தவை. 
கெல்த்திய மதத்தில் புனிதமாக இருந்த பல விஷயங்களை சாத்தானியக் கலாச்சாரமாகக் கருதச் செய்துவிட்டார்கள். 
பதின்மூன்றுக்கு ஏதோ விசேஷமான கூறுகள் இருக்கின்றன என்பது 
வாஸ்தவம்தான். 
பதின்மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் அதை மாந்திரீகவாதினிகளுடைய(Witches) முக்கிய நாளாகக் கருதுவார்கள். அது ஏதோ சூனியம் நிறைந்த நாள் என்று தற்கால ஐரோப்பியர்கள் கருதுவார்கள். அதனை Witches Sabbath என்றும் அழைப்பார்கள்.
இந்தச் சேர்க்கையானது Witchcraft, Satanic Worship ஆகியவற்றிற்கு முக்கியமானது. நம்முடைய சம்பிரதாயத்தில் வெள்ளிக்கிழமையும் 
அமாவாசையும் சேர்வது குறித்து பல விசேஷங்கள் உண்டு. 
அகத்தியர் யாஹ¥ மடற்குழுவில் Tridecaphobia, Friday 13, வெள்ளிக்
கிழமை அமாவாசை முதலியவற்றைப் பற்றிய சில மடல்கள் இருக்கின்றன.
அமெரிக்கர்கள் அப்போலோ விண்கலங்களை வெற்றிகரமாக 
செலுத்திக்கொண்டிருந்தபோது அந்த வரிசையில் அப்போலோ 13 
இருப்பதைக் குறித்து அந்த எண்ணுக்காக அஞ்சினார்.
அதுவும் கோளாறாக முடிந்தது. இன்னும் நிறைய 13ஐப் பற்றி சொல்லலாம்.
ஏசு பெருமானார் தம்முடைய பன்னிரண்டு சீடர்களுடன் இருந்து 
கடைசி பாஸோவர் விருந்தை உண்டார். அத்துடன் சீடன் யூதாஸை அவர் வெளியில் அனுப்பினார். சற்று நேரத்தில் விருந்து முடிந்த பின்னர், யூதாஸ் சில போர் வீரர்களுடன் வந்தான். அவன் ஏசு பெருமானாரின் கன்னத்தில் முத்தமிட்டான். அதையே அடையாளாகவும்  சைகையாகவும் கருதிய போர்வீரர்கள் ஏசு பெருமானாரைக் கைது செய்தனர். பின்னர் அவர் சித்திரவதைகளுக்குப் பின்னர் சிலுவையில் அறையப்பட்டார். யூதாஸ¤ம் தூக்குப் போட்டுக் கொண்டான்.
பதிமூன்றைப் பற்றி பயப்படுவதற்கு இந்தக் கதையையும் காரணமாகச் சொல்வார்கள்.
ஆனால் நம்முடைய ஆகம புராணங்களில் பதின்மூன்றைப் பற்றி 
ஏதும் பயம் இருப்பதாகத் தெரியவில்லை.
சீனர்கள் பதிமூன்றுக்குப் பயப்படுவார்கள். அவர்கள் பயப்படுவதன் 
காரணம் வேறு.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Monday, April 28, 2014

JACKAL


ஓநாயின் நாள் - 
DAY OF THE JACKAL



        Frederic Forsythe பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். 
அவர் எழுதிய கதைகளிற் சில, படங்களாக வந்துள்ளன. Day Of The Jackal, Odessa File, Dogs Of War ஆகியவை நினைவுக்கு வருகின்றன. ஜாக்கால் கதையின் தொடர்ச்சி கூட வந்தது. ப்ரூஸ் வில்லிஸ் நடித்த படம். அதன் ஒரிஜினலில் 
ஜாக்கால் பாத்திரத்தில் Edward Fox நடித்திருப்பார். காந்தி படத்தில் ஜாலியன் வாலா பாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டையராக நடித்த அதே ஆசாமிதான்.

'The Afgan' புத்தகத்துக்கு முன்னர் 'The Veteran' என்னும் புத்தகத்தை எழுதி யிருக்கிறார். அது நான்கு குறுநாவல்களைக் கொண்டது. இரண்டு சிறுகதைத் 
தொகுப்புகளும் உள்ளன.

·பார்ஸித் எழுதியவற்றில் மிகச் சிறந்ததாகச் சொல்லப்படுவது ஜாக்கால் கதைதான். அதை ஒட்டி ஒடெஸ்ஸா ·பைல் வரும்.

இரண்டு நூற்றாண்டுகளாகக் கஷ்டப்பட்டு  உலகத்தின் முக்கிய பகுதிகளில் பல காலனிகளை ·பிரான்ஸ் பிடித்து, சேர்த்து வைத்து ஆண்டு கொண்டிருந்தது. பல ஆ·ப்ரிக்க நாடுகள், இந்தோசீனா, க்யானா, மொரோக்கோ, அல்ஜீரியா என்று இங்கும் அங்குமாக இருந்தன.
இரண்டாம் உலக யுத்த முடிவில் காலனித்துவ 
எதிர்ப்பு உலகெங்கும் ஓங்கியது. 
இந்தோச்சீனாவை உலக யுத்தத்தின்போது ஜப்பானியர் கைப்பற்றி யிருந்தனர். ஜப்பான் தோல்வியுற்ற பின்னர் இந்தோச்சீனாவை ·பிரான்ஸ் மீண்டும் தன் ஆட்சிக்குள் கொண்டுவர முற்பட்டது. 
ஆனால் ஹோச்சீமின் என்னும் வியட்நாமியப் பொதுவுடைமைத் தலைவரின் படைகளுடன் டியென் பியென் பூஹ் என்னும் இடத்தில் ஏற்பட்ட போரில் ·பிரான்ஸ் படுதோல்வியுற்றது. 
·பிரான்ஸ் அந்த வாக்கில் இந்தோசீனாவைக் கைவிட்டுவிட்டு வெளியேறியது. 
இந்தப் போரில் முக்கிய பங்கெற்ற படைப் பிரிவு French Foreign Legion என்பது. 
·பிரெஞ்சுக்காரர் அல்லாத பிற நாட்டினர்கள் சேர்ந்த படைப் பிரிவு அது. 
அதில் சேர்பவர்களின் விபரங்கள் அதிரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். ஆகவே எங்கெங்கிருந்தோ ஓடி வந்தவர்களெல்லாம் ·பாரின் லீஜனில் இருந்தனர். பிடிபடாத நாட்ஸி ஜெர்மானியர் பலர் இருந்தனர். 
அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கி நல்ல வருமானத்தையும் கொடுத்து ·பிரான்ஸ் வைத்திருந்தது. பயங்கரக் குற்றவாளிகள், முரடர்கள், கொலை வெறியர்கள் போன்றோரெல்லாம் இருந்தனர். ஆனால் அதைவிட கடுமையான கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் லீஜன் படையில் இருந்தன. ஆகவே லீஜனில் ஒழுங்கும் கட்டுப்பாடும் அதிகம். போர் என்று வந்தால் மிகக் 
கடுமையாகப் போரிடுவார்கள். ·பாரின் லீஜன் அதன் பயங்கரத்துக்குப் பேர் போனதாக விளங்கியது. 
எப்போதுமே வெற்றி பெற்று வந்த படை அது. 
அப்பேற்பட்ட படையை வியட்நாமியர்கள் தோற்கடித்தனர். 
இந்தோச்சீனாவைத் தொடர்ந்து வட ஆ·ப்ரிக்காவில் உள்ள அரபு நாடாகிய அல்ஜீரியாவில் புரட்சி ஏற்பட்டது. அல்ஜீரிய விடுதலைப் படையுடன் ஏற்பட்ட போர்களில் ·பிரான்ஸ¤க்கு அதிக சேதம். 
அல்ஜீரியாவும் டூனீஸியாவும் மொரோக்கோவும் மத்தியதரைக்கடலில் ·பிரான்ஸ¤க்கு எதிர்க்கரையில் இருந்தன. அவற்றின் கடற்கரை ஓரப் பிரதேசங்கள் வெப்பம் அதிகம் இல்லாமல் நன்றாக வளமாக இருந்தன.  
தென் ·பிரான்ஸின் சீதோஷ்ண நிலையை அனுசரித்து இருந்தன. 
ஆகவே அந்த இடங்களில் ·பிரெஞ்சுக்காரர்கள் ஏராளமாகக் குடியேறி யிருந்தனர். திராட்சைத் தோட்டம் அது இது என்று தடபுடலாக வாழ்ந்து வந்தனர். 
அல்ஜீரியாவைட்டு ·பிரான்ஸ் அகன்றுவிட்டால் அங்கிருந்த ·பிரெஞ்சுக் காரர்கள் பாடு அதோகதிதான். ஆகவே அவர்களும் படையைத் திரட்டிக் கொண்டு அரபுகளுடன் போரிட்டுக்கொண்டிருந்தனர். ·பிரான்ஸின் 
தீவிர வலதுசாரிகள் இவர்களை ஆதரித்தனர். 
ஆளாளுக்கு கெரில்லாப் போர்களைப் புரிந்துகொண்டிருந்தனர்.
·பிரான்ஸின் நிலைமை நாளுக்கு நாள் படுமோசமாகிக்கொண்டிருந்தது. 
·பிரான்ஸின் அரசு அடிக்கடி மாறிக் கொண்டிருந்தது. அதன் நாணய மதிப்பும் குறைந்து பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டது. அடிக்கடி அரசுகள் கவிழ்ந்துகொண்டேயிருந்தன.
அப்போது சார்ல்ஸ் தெ கால் Charles de Gaulle என்னும் மாஜி தளபதி ஆட்சியைக் கைப்பற்றினார். 
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனிலிருந்து ·பிரெஞ்சுப் படையைத் திரட்டிக்கொண்டு ·பிரான்ஸில் இருந்த ஜெர்மானியருடன் போரிட்டவர். பாரிஸை விடுவித்தவர்.
உலக யுத்த முடிவில் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிக்கொண்டவர். 
·பிரான்ஸை மீண்டும் காப்பாற்றவேண்டி அவர் ஆட்சியைப் பிடித்துக்கொண்டார். 
·பிரான்ஸை நிலைநிறுத்துவதற்கு இருந்த வழி, அதனுடைய காலனிகளுக்கு சுதந்திரம் கொடுப்பதுதான். அந்த நாடுகள் விரும்பினால் ·பிரான்ஸ் நாட்டின் மாநிலமாக விளங்கலாம். கடலுக்கப்பாலுள்ள மாநிலங்கள் என்ற விசேஷப் பிரிவில் பல குட்டிநாடுகள் வந்தன. 
இருப்பனவற்றில் அல்ஜீரியாவே சிக்கல் மிகுந்ததாக இருந்தது. ஏனெனில் அதைத் தாய்நாடாகக் கொண்டிருந்த ·பிரெஞ்சுக்காரர்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்தனர். அவர்களோ சுதந்திரத்தை வெறுத்தனர். 
தே கால் வரிசையாக எல்லாக் காலனிகளையும் விடுவிக்க ஆரம்பித்தார். 
அல்ஜீரியாவுக்கும் சுதந்திரம் கொடுக்க ஏற்பாடு செய்தார். 
இதை நிறுத்தவேண்டுமானால் ஒரே வழிதான். தே காலைப் போட்டுத் தள்ளுவது. 
மலேசியத் தமிழ் கலாச்சாரப்படி "தூக்குங்கடா அவன!".
தே காலைத் தூக்குவதற்குப் பெரும்பணத்தை எப்படியோ திரட்டி ஒரு கொலையாளியை ஏற்பாடு செய்து வலச்சாரியினர் அனுப்பினர். 
அந்த ரகசியக் கொலையாளியின் பெயர் யாருக்கும் தெரியாது. 
Chakal என்ற பெயரால் அவன் விளங்கினான். ஆங்கிலத்தில் Jackal. அதாவது ஓநாய்.
தெ காலைக் கொலைசெய்ய ஜாக்கால் செய்த முயற்சி, போட்ட திட்டம், அதை ஸ்பெஷல் டிட்டெக்டிவ் ஒருவர் முறியடித்து அவனைக் கொன்றது.....
இதுதான் Day Of The Jackal கதை.

                                  $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Wednesday, January 22, 2014

THIRUNEERRU THIRUPADHIGAM



திருநீற்றுத் திருப்பதிகம் 

பின்னணியும் மூலமும் எளிய உரையும்
விளக்கங்களுடன்




தமிழ்ச் சைவசமயத்திலுள்ள மிகச்சிறந்த மந்திர துதிகளில் 
ஒன்றாகக் கருதப்படுவது திருஞானசம்பந்தரின் திருநீற்றுத் திருப்பதிகம். 

இதன் பின்னணி எல்லாருக்கும் தெரியும் என்று ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை. 

சமணர்களை ஒடுக்கி பாண்டிய மன்னரைச் சைவராக்கி, 
அதன்மூலம் பாண்டியநாட்டையும் சைவநாடாக்குவதற்காக சம்பந்தப்
பெருமானார் மதுரைக்கு வந்தபோது, அவர் தங்கியிருந்த திருமடத்திற்கு 
சமணர்கள் நெருப்பிட்டனர். 
அவர் தம்முடைய ஆற்றலால் சிவனை வேண்டி அந்த நெருப்பின் 
தகிப்பை வெப்பு நோயாக்கி, பாண்டிய மன்னருக்கு அனுப்பிவிட்டார். 

வெப்பு நோயைத் தீர்க்க சமணர்கள் எவ்வளவோ முயன்றும் 
முடியவில்லை. 
பாண்டியரின் வெப்புநோயைத் சம்பந்தபெருமான் தீர்த்துவைப்பார் 
என்று பாண்டிமாதேவி மங்கையற்கரசியார் சொன்னதன் பேரில் அவரைப் 
பாண்டியர் வரவழைத்தார்.
பாண்டியனாரின் உடலின் ஒரு பாதியை சமணர்கள் தங்களின் மணி மந்திர ஔஷதங்களால் குணப்படுத்த முயல்வது என்றும் இன்னொரு பாதியை சம்பந்தப்பெருமானார் குணப்படுத்துவது என்பதும் சவால்.

சமணர்கள் முயற்சி செய்த பகுதியில் நோய் அதிகரித்தது. 

அப்போது சம்பந்தபெருமானார் மடைப் பள்ளியிலிருந்து அடுப்புச் சாம்பலை எடுத்துவரச்செய்தார். 

அந்தச் சாம்பலை வைத்து 'மந்திரமாவது நீறு' என்று திருநீற்றுத் திருப்பதிகத்தைப் பாடி, அதற்கு உருவேற்றி, பாண்டியனாரின் உடலில் தடவினார். அத்துடன் அந்தப் பாதியிலிருந்து நோய் நீங்கி சமணர்களின் பாதிக்குச் சென்று இன்னும் கடுமையாக மாறியது. 
அதன்பின்னர் இன்னொரு பாதியிலும் சாம்பலைத் தடவினார். 
நோய் உடனே அகன்றது. 

சமீபகாலம்வரையிலும் மதுரையில் அந்த மடத்தில் மடப்பள்ளிச் 
சாம்பலையே திருநீற்றுப் பிரசாதமாகக் கொடுத்துவந்திருக்கிறார்கள். 
இப்போது அந்த வழக்கம் உண்டா என்பது தெரியவில்லை. 
மதுரைத் தலத்திலேயே அப்படியொரு வழக்கம் இருந்ததாகவும் 
கூறுவார்கள்.
அடுப்படிச் சாம்பலுக்கும் அப்படியொரு மகிமை.
எல்லாமே கைவிசேஷம்தான். நம்பிக்கைதான். பதிகமும் வேலை செய்கிறது. சிவனருள் கைகூடுகிறது. 

1.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு 
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு 
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயன் திருநீறே

மந்திரமாக விளங்குவதும் திருநீறு; தேவர்கள் முதலிய தெய்வங்கள், கணங்களின் மீது விளங்குவதும் நீறு; அழகாக விளங்குவது நீறு; நீறு வணங்கித் துதித்துப் போற்றுதற்கு உரியது; ஆகம தந்திரங்களின் வடிவமாக விளங்குவது நீறு; சமயங்கள், மதங்களின் பொருளாக இருப்பது நீறு; செம்மையான இதழ்கள் கொண்ட வாயை உடைய உமையாகிய அங்கயற்கண்ணியை உடலில் பங்கு வைத்த மங்கைபாகனாகிய 
திருவாலவாயனின் திருநீறே

2.
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத்தருவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப்புனல்வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

வேதத்தின் உள்ளே விரவி நிற்பது நீறு. 
கொடிய துன்பத்தைத் தீர்ப்பது நீறு. 
மெய்யறிவைத் தருவது நீறு
இழிந்த தன்மையைத் தவிர்ப்பது நீறு
அதன் பெருமைகளை ஓதினால் வேண்டியதைத் தரக்கூடியது 
நீறு.
மெய்யாம் தன்மையில் உள்ளது நீறு
மதுரை நகரம் குளுமையான புனல்களால் சூழப்பெற்றது. 
அந்த மதுராநாயகனான ஆலவாயானுடைய திருநீறு இப்படிப்பட்டது

திருநீற்றுத் திருப்பதிகம் -#3

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
புத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே

முக்தியை அளிப்பது திருநீறு
முனிவர்கள் அணிந்துகொள்வது திருநீறு
சத்தியப் பொருளாக உள்ளது நீறு. திருநீற்றின்மேல் 
ஆணையிட்டுக் கூறும் வழக்கம் இருந்தது. 
தக்கவர்களால் புகழப்படுவது நீறு
புத்தியைக் கொடுப்பது திருநீறு
துதிப்பதால் இன்பத்தைத் தருவது திருநீறு
சித்திகளைக் கொடுப்பது திருநீறு
அத்தகையது திருவாலயான் திருநீறே

திருநீற்றுத் திருப்பதிகம் -#4

காண இனியது நீறு, கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு 
மாணம் தகைவது நீறு, மதியைத் தருவது நீறு
சேணம் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே

பார்ப்பதற்கு இனிமையானது திருநீறு
தன்னை அணிந்துகொள்வார்க்கு அழகைத் தருவது திருநீறு
விரும்பி அணிந்துகொள்வோர் யாவருக்கும் பெருமையைக் 
கொடுப்பது திருநீறு
ஆணவத்தைக் கெடுப்பது திருதிருநீறு
நல்லறிவைக் கொடுப்பது திருநீறு
தேவருலக வழ்வைத் தருவது திருநீறு

திருநீற்றுத் திருப்பதிகம் -#5

பூச இனியது நீறு, புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு, பெருந்தவத்தோர்களுக்கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு, அந்தமதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவாலவாயான் திருநீறே

பூசிக்கொள்வதற்கு இனிமையானது திருநீறு
புண்ணியமாக விளங்குவது திருநீறு
அதன் பெருமையை எடுத்துப்பேச இனிமையாயுள்ளது 
திருநீறு
பெரும் தவம் புரிபவர்களுக்குப் பற்றுக்களையும் 
ஆசைகளையும் கெடுப்பது திருநீறு
முடிவான பொருளாக உள்ளது திருநீறு
தேசங்கள் முழுவதாலும் புகழப்படுவது திருநீறு
திருவாலவாயன் திருநீறு அப்பேற்பட்டது

திருநீற்றுத் திருப்பதிகம் -#6

அருத்தமாவது நீரு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது நீரு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

செல்வமாக இருப்பது திருநீறு
வீணான இழிநிலையை மாற்றி இன்பநிலையைத் 
தருவது திருநீறு 
மனத்துன்பத்தைத் தணிப்பது திருநீறு
தேவருலகை வாழவைப்பது திருநீறு 
எக்காரியத்துக்கும் பொருந்தி நிற்பது திருநீறு
புண்ணியம் செய்ய்பவர்கள் பூசிக்கொள்வது திருநீறு
லட்சுமி வசிக்கும் மாளிகைகள் சூழ்ந்துள்ள திருவாலவாயான் 
திருநீறே

திருந்நீற்றுத் திருப்பதிகம் -#7

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொருதரு சூலத்து ஆலவாயான் திருநீறே

திரிபுரங்களை அழித்தது திருநீறு.
(திரிபுரங்களைப் பற்றியும் அவற்றை சிவபெருமான் 
அழித்த கதையையும் கீழ்க்கண்ட இடத்தில் காணலாம் - 

<தமிழ்>
http://www.visvacomplex.com/Thiripura_SammAram1.html

<இங்கிலீஷ்>
http://www.visvacomplex.com/Thiripura_Samharam1%28E%29.html

இம்மை மறுமை இன்பங்களுக்கு உரியது திருநீறு
பழக்கத்தில் அணியப்படுவது திருநீறு
செல்வமாக உள்ளதுடன் வேறு எல்லாப்பேறுகளாகவும் 
உள்ளது திருநீறு
பேருறக்கத்தைத் தடுப்பது திருநீறு
தூய்மை செய்யும் இத்திருநீறு 
இது கூர்மையாக விளங்கும் சூலாயுதத்தைத் தரித்துள்ள 
திருஆலவாய்ப் பெருமானது திருநீறாகும்


திருநீற்றுத் திருப்பதிகம் -#8

இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு 
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே

இராவணன் அதன் உடம்பில் அணிந்துகொள்வது திருநீறு. 

 <திருஞானசம்பந்தரின் பதிகங்களில் ஒரு வழக்கு 
உண்டு. எட்டாவது பாடலில் ராவணனைக் குறிப்பிடுவார். 
ஒன்பதாவது பாடலில் திருமாலும் பிரம்மனும் சிவபெருமானுடைய 
அடியையும் முடியையும் காணாத விஷயத்தைக் குறிப்பிடுவார். 
பத்தாவது பாட்டில் சமணர்களையும் பௌத்தர்களையும் 
கண்டனம் செய்திருப்பார். ராவணன் மிகச்சிறந்த சிவபக்தன். 
வெல்லப்படமுடியாதவனாக இருந்தவன். அவனுடைய கர்வத்தை 
ஒடுக்கி, அவனுக்கு வலுமிக்க வரங்களையும் தந்து அருளியவர் 
சிவபெருமான். சிவபக்தனாகிய அவனுடைய உடலில் தரிக்கப்
பட்டிருப்பது திருநீறு.>

இதன் மேல்விளக்கமாகப் பழைய அகத்திய மடல் 
ஒன்று:

 விஸ்ரவாஸ் என்னும் ரிஷி ஒருவர் இருந்தார்.
 அசுரர் குலத்தைச்சேர்ந்த அரசகுமாரி ஒருத்தி அவருடன் 
கூடி வலிமை மிக்க மக்களைப் பெற்றாள். அவர்களில் மூத்தவனாகிய 
தசகண்டனுக்குப் பத்துத்தலைகளும் இருபது கைகளும். 
 அவன் பிரம்மாவை நோக்கி தவமிருந்து வலிமையும் பல 
வரங்களையும் பெற்றான். 
 அவனுடைய அரைச் சகோதரன் - Half-brother-ஐ அப்படித்
தானே சொல்லவேண்டும் - குபேரன். அவனும் விஸ்ரவாஸ¤க்குப் 
பிறந்தவன்தான். ஆனால் தாய் யக்ஷ¢ணி. 

 விஸ்ரவாஸ் ரொம்பவும் தியாக உணர்வும் பரந்த மனப்பான்மையும் 
உள்ளவர். இனவேறுபாடு பார்க்காமல் அசுரப்பெண், யக்ஷப்பெண் என்று 
விதைத்துக்கொண்டே போயிருக்கிறார், பாருங்கள். 
 குபேரன் சிவபெருமானை நோக்கித் தீவிர தவமிருந்து 
லங்காபுரியையும் புஷ்பகவிமானத்தையும் பெற்று சுபிட்சமாக இருந்தான். 

 தசகண்டன் அவனை விரட்டிவிட்டு புஷ்பக விமானத்தையும் 
லங்காபுரியையும் கைப்பற்றிக்கொண்டு இலங்கேஸ்வரன் ஆனான். 

 விரட்டப்பட்ட குபேரன் சிவபெருமானிடம் புலம்பினான். அவர் 
அவனுக்கு அளகாபுரி என்னும் பட்டணத்தையும் நவநிதிகளையும் 
கொடுத்து, தம்முடைய தோழனாக்கிக் கொண்டார்.

 ஒருநாள் தசகண்டன் வடதிசையை நோக்கித் தன் புஷ்பக 
விமானத்தில் சென்றான். எதிரில் கயிலை மலை இருந்தது. அதன்மீது 
விமானம் பறக்காது. ஏனெனில் அதன்மீது சிவசக்தியர் தம்முடைய 
கணங்களுடன் இருந்தனர். ஆகவே கயிலையை அப்படியே பெயர்த்து 
எடுத்து அப்புறமாக வைத்துவிட்டு, விமானத்தைச் செலுத்த நினைத்தான். 
சுற்றிச் செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. 
 மலையைப் பெயர்க்க முயன்றதுதான் தாமதம். சக்தி சிவனை 
பயந்து கட்டிப்பிடித்துக்கொண்டது. 
 சிவன் கொஞ்சமும் அலட்டிக்காமல் லேசாக, மிக மிக லேசாகத் 
தம்முடைய கால் பெருவிரலை ஊன்றினார். 
 மலை அப்படியே தசகண்டன்மீது உட்கார்ந்து அவனைப்போட்டு 
நசுக்கியது. 
 வலி தாங்காமல் பயங்கரமாக ஓலமிட்டு அலறினான்.
 அதுவரைக்கும் அந்தமாதிரி யாருமே அலறியது கிடையாது. 

 பல ஆண்டுகள் அவ்வாறு நசுங்கிக் கிடந்து, மிகவும் வருந்திக்
கொண்டிருந்தான். அப்போது ஒரு சிவமுனிவர் சும்மா இருக்கமாட்டாமல் 
அவனிடம்வந்து சாமகானப்பிரியனாகிய சிவனை இசையால் போற்றச்
சொன்னார். உடனே தன்னுடைய தலையைக் கொய்து ஒரு கையையும் 
பிய்த்து யாழ் செய்து கைநரம்புகளை மீட்டி வாசித்தான். 

 மனமகிழ்ந்த சிவபெருமான் அவனை விடுவித்ததுமட்டுமல்லாமல் 
முக்கோடி வாழ்நாள் கொண்ட ஆயுளும் பராக்கிரமும் வஜ்ரசரீரமும் 
பாசுபதம் முதலிய அஸ்திரங்களும் கொடுத்தார். யாராலும் வெல்லப்பட
முடியாத வாள் ஒன்றையும் கொடுத்தார். 

 சக்தி சிவனை எதிர்பாராமல் தழுவி ஆலிங்கனம் செய்தததால்தான் 
அதற்கு மூலகாரணனாக இருந்த ராவணனுக்கு இந்த மாதிரியெல்லாம் 
கண்டதனமாக வரங்களையெல்லாம் சிவன் அள்ளிக்கொடுத்தார் என்று 
அங்கிருந்த பூதங்கள் கிசுகிசுத்தன.

 அத்துடனல்லாமல் ஒப்பும் இணையும் இல்லாத அளவுக்கு 
அலறியதால் அவனுக்கு ராவணன் என்ற பெயரும் இட்டார். 
'ராவணம்' என்றால் 'அலறல்'. 

 இருந்தாலும் தம்மைக் கேட்காமல் தன்னிச்சையாக ராவணனுக்கு 
யோசனை சொன்ன அந்த சிவமுனிவரை மனிதனாகப் பிறந்து சிவனாகிய 
தம்மை மறந்து பிறசமயத்தில் உழன்று மீண்டும் தம்மை அடையுமாறு 
செய்தார். அவரும் அவ்வாறே சிவனை மறந்து, பிற சமயத்தில் நுழைந்து, 
பின்னர் சிவனருளால் சூலைநோயால் கஷ்டப்பட்டு, 
"கூற்றாயினவாறு விலக்கிகிலீர்" என்று சிவனிடம் அடைக்கலம் புகுந்து, 
"புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன், பூம்புகலூர் மேவிய புண்ணியனே" 
என்றவாறு சிவனோடு சேர்ந்துகொண்டார். 


மனதில் எண்ணப்பட்டதையெல்லாம் தரக்கூடியது திருநீறு
<சிந்தாமணி என்பது தேவலோகத்தில் இருக்கக்கூடியது. 
மனதில் எதை நினக்கிறோமோ அதைக் கொடுக்கும் 
சக்தி படைத்தது. கற்பக தரு எனப்படும் தெய்வீக மரமும் 
உண்டு. அதனடியில் இருந்து நினைக்கும் பொருள்களைக் 
கொடுக்கும்>.

பராசக்தியின் தன்மையாயிருப்பது திருநீறு
<பராவணம் - பரா வண்ணம்; பரா என்பது பரையாகிய ஆதி 
பரம்பொருளைக் குறிக்கும். பரையின் வண்ணம். சிவனும் 
பரையும் ஒன்றேதான். சிவனின் அருட்சக்தி பரை. இறைவனின் 
திருவருள் பராசக்தி>

அணிந்துகொள்வாருடைய பாவத்தைப் போக்குவது 
திருநீறு

அனைத்தையும் தாங்கி நிற்கும் ப்ருதிவி தத்துவமாக இருப்பது 
திருநீறு.
<தராவணம் - தரை வண்ணம்>

தத்துவங்களாக விளங்குவது திருநீறு

பாம்புகள் வணங்கும் திருமேனியுடைய ஆலவாயான் திருநீறு 
இப்படிப்பட்டது.

திருநீற்றுத் திருப்பதிகம் -#9

மாலொடு அயனறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே

திருமாலும் பிரம்மனும் அறியமுடியாத சிறப்பினையும் 
உடையது திருநீறு 

மேலே உள்ள விண்ணுலகங்களில் வசிக்கும் தேவர்கள் 
தங்கள் உடலில் அணிந்திருப்பது திருநீறு

பொருந்துமாறு உடம்பில் ஏற்படும் துன்பங்களைத் தீர்க்கக்
கூடிய இன்பத்தைத் தருவது திருநீறு

ஆலஹாலம் என்னும் விஷத்தை எடுத்து உண்டு, தம்முடைய 
மிடற்றில் அடக்கிக்கொண்ட திருவாலவாயானுடைய திருநீறு 
இப்பெருமைகளைக் கொண்டது.

திருநீற்றுத் திருப்பதிகம் - #10

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே

குண்டிகையாகிய நீர்ப்பாத்திரத்தைக் கையில் தாங்கிய 
சமணர்களோடு பௌத்தர்களுடைய கூட்டமும் கண்டு 
கண் திகைக்குமாறு செய்வது திருநீறு

நினைப்பதற்கு இனியது திருநீறு

எட்டுத் திசைகளிலும் இருக்கும் - மெய்ப்பொருளைத் 
தேடிக் கண்டவர்களால் புகழ்ந்து பரவப்படுவது திருநீறு

பிரபஞ்சத்தில் இருக்கும் பற்பல அண்டங்களில் இருப்பவர்களால் 
பணிந்து ஏத்தப்படும் திருஆலவாயான் திருநீறு அப்படிப்பட்டது.

திருநீற்றுத் திருப்பதிகம்
திருக்கடைக்காப்பு

திருச்சிற்றம்பலம்

ஆற்றும் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலவும் பூசுரன் ஞானசம் பந்தன் 
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

வல்லமையும் வெற்றியும் உடைய காளையின் மீது 
எழுந்தருளியிருக்கும் ஆலவாயானுடைய திருநீற்றின் 
பெருமையைச் சீர்காழியில் வாழும் பூசுரனாகிய 
ஞானசம்பந்தனாகிய நான் துதித்துத் தெளிந்து - 
பாண்டியனின் உடலில் பொருந்திய வெப்பு நோயும் கூனும் 
பிறவிப்பிணியும் ஒழியுமாறு கூறிய இந்தப் பத்துப் பாடல்களையும் 
நன்கு பயில்கின்றவர்கள் எல்லா நலன்களுக்கும் உரியவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$