Tuesday, April 7, 2015

PREDICTIONS

 ஜோதிட பலன்




     சில ஆண்டுகளுக்கு முன்னர் 'மகவோட்டம்' எழுதும்போது தூமகேது எனப்படும் வால்நட்சத்திரத்தைக் குறிப்பிட்டிருந்தேன். 
தூமகேது என்றால் 'புகை கிரகம்' என்று அர்த்தம்.
'கேது' என்பது பொதுவாகக் கிரகத்தைக் குறிக்கும். எப்படியோ ராகுவின் உடற்பகுதியின் பெயராக மாறிவிட்டது. 
தூமகேது தோன்றுவது குறித்து பல நம்பிக்கைகள் இருந்தன. தீயபலனைத் தருபவை என்றே நம்பினார்கள்.

கி.பி 68 ஆம் ஆண்டு ஒரு தூமகேது தோன்றியது. அவ்வமயம் வரலாற்றிலேயே மிகுந்த அரக்கமனம் படைத்த கொடுங்கோலர்களின் வரிசையில் இடம்பெற்று விட்ட நீரோ மன்னன் ரோமப் பேரரசை ஆண்டு வந்தான். அரசனுக்கு ஆபத்து நேரும் என்று சொல்லக் கேள்விப்பட்ட நீரோ, கதிகலங்கிப் போய் தன் நாட்டிலிருந்த அரச மரபினரையும், பிரபுக்களையும் கொலை செய்ய ஆரம்பித்தான். இவ்வாறு செய்தால் தூமகேதுவின் இரத்த தாகம் அடங்கி, அது திரும்பிப் போய்விடும் என்றும், தான் மட்டும் தப்பித்து 
விடலாம் என்றும் நம்பினான்.

அது என்னவோ! சொல்லி வைத்தாற் போல போய்விட்டது... நிம்மதிப் பெருமூச்சு விட்ட நீரோ மன்னன் தன்னுடைய ஆஸ்தான சோதிடனாகிய பேபிலஸ¤க்கு மிக நல்ல முறையில் பரிசளித்தான். 

இருப்பினும், சில ஆண்டுகள் கழித்து தன்னுடைய சொந்தப் பாதுகாப்பாளர்களாலேயே கொலை செய்யப்பட்டு ஒழிந்தான்.

எல்லா சோதிடர்களும் பேபிலஸைப் போல் கொடுத்து வைத்தவர்களில்லை. 
நீரோவின் பாட்டனாகிய டைபீரியஸ் தனக்குக் கெட்ட பலன்களைக் கூறிய தன்னுடைய ஆஸ்தான சோதிடனைக் கைகளையும் கால்களையும் கட்டி ஆற்றில் வீசி எறியச் செய்தான்.

பதினொன்றாம் லூயி மன்னன் பிரஞ்சு நாட்டை ஆண்ட சமயத்தில், அவனுடைய மிக முக்கியமான காதலி ஒருத்தியின் இறப்பை முன்கூட்டியே அவனுடைய ஆஸ்தான சோதிடன் கூறினான். 
அதன்படியே விரைவில் அவள் இறந்தாள். 
மனவருத்தமுற்ற லூயியோ சோதிடனின் கருநாக்கிலிருந்து பிறந்த வாக்கு அவளைக் கொன்று விட்டது என்று நம்பினான். 
ஆகவே, தன்னுடைய குண்டர் படையை அரசவையில் தயாராக இருக்கச் செய்துவிட்டு, சோதிடனை சபைக்கு வரவழைத்தான். 
லூயி சைகை காட்டியவுடன், குண்டர்கள் சோதிடனைப் பிடித்து ஒரு சாக்குப் பையில் போட்டுத் தைத்து, ஸெயின் ஆற்றில் எறிந்துவிட வேண்டுமென்று  அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். 
தன் முன் வந்த சோதிடனிடம் அரசன், "நீ மற்றவர்களின் ஆயுளை நிர்ணயம் செய்கிறாயே..! நீ எவ்வளவு நாட்களில் இறப்பாய் என்பதை உன்னாலேயே கூற முடியுமா...?'' என்று கேட்டான்.
சோதிடன் சுதாரித்துக்கொண்டான்.
கேள்வியின் தன்மை அப்படி. 
ஏன் அரசன் கேட்கிறான் என்பதன் காரணத்தை உணர்ந்துகொண்டு விட்டான்.
இதற்கெல்லாம் சோதிடம் தேவையில்லையே.
Common Sense என்பார்களே. அது இருந்தால் போதும். அது அந்த சோதிடனிடத்தில் நிறைய இருந்தது. 

அதற்கு அந்த சோதிடன், 
"அரசே! விண்மீன்களும் கோள்களும் கூறுவதைத்தான் நான் தங்களிடம் கணித்துக் கூற முடியும்.... வேறெதையும் நான் கூற முடியாது. இந்த நாட்டின் அரசன் இறப்பதற்குச் சரியாக மூன்று நாட்களுக்கு முன்னதாக நான் இறந்து 
விடுவேனென்று விண்மீன்களும் கோள்களும் கூறுகின்றன.." என்றான்.

லூயி மிகவும் யோசித்துவிட்டு, விஷப் பரீட்சைகள் எதற்கு என்று சைகை காட்டாமல் இருந்துவிட்டான்.
அதிலிருந்து சோதிடனுக்குச் சகலவிதமான வசதிகளையும் அரண்மனையிலேயே செய்துகொடுத்து, தன்னுடன் வைத்துக்கொண்டு, அரச வைத்தியர்களை அவனுக்கென்று நியமித்து வைத்தான். 
அத்துடன் நில்லாமல் சோதிடனின் உடல்நிலை, மனநிலை, வசதிகள் முதலியவைகளை அக்கறையுடன் அடிக்கடி விசாரித்த வண்ணம் இருக்கலானான்.

டைபீரியஸ் மாதிரி ஆட்கள் இல்லாததாலோ என்னவோ, மலேசியாவில் தற்சமயம் லக்கனம் கணிப்பது முதல் ராகு காலம் நிர்ணயிப்பது வரை தவறாகக் கணித்துக்கொண்டும். விபரீத பலன்களைக் கூறிக் கொண்டும் பயமுறுத்திக் கொண்டும் பணம் பண்ணிக் கொண்டும் பலர்  இருக்கிறார்கள். 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Monday, March 30, 2015

LOOT AND INFLATION

வரலாற்றில் பணவீக்கம் + லூட்டி

தமிழ் அரசர்கள் மற்ற நாடுகளின் மீது படையெடுத்து வென்று திரும்பும் போது அந்த நாடுகளிலிருந்து பெரும் பொருளைக் கைப்பற்றிக் கொண்டு வருவார்கள். கப்பமாகவும் ஆண்டு தோறும் வசூலிப்பார்கள். 
இதனால் வென்ற நாட்டிலும் வெல்லப்பட்ட நாட்டிலும் இருவேறு விதமான பொருளாதார நிலைக்குலைவுகள் ஏற்படும்.

ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் பாண்டிய நாட்டில் ஒரு பொற்காசுக்கு ஆயிரம் வாழைப்பழங்கள் அல்லது பதினோராயிரத்து இருநூறு வெற்றிலை அல்லது பத்தாயிரத்து நூறு கொட்டைப்பாக்கு வாங்க முடிந்தது. 
அக்காலத்தில் பாண்டிய நாட்டில் நிலவிய மார்க்கெட் நிலவரம் அப்படி! 
வெற்றிகரமான படையெடுப்பின் முடிவில் கொண்டுவந்த நிதிக் குவியலில் (War Booty  என்று கூறுவார்கள்) பெருமளவு பொன் இருக்கும். நாட்டில் திடீரென்று ஏற்படும் இந்தப் பெரிய அளவு பொன்னின் புழக்கம் பயங்கரமான பணவீக்கத்தை ஏற்படுத்திப் பொருளாதாரத் தடுமாற்றத்தை விளைவிக்கும். 
'காசு ஒன்றுக்கு ஆயிரம்' என்ற விலைக்கு விற்கப்பட்ட  வாழைப்பழம் ஒன்றை காசுகள் ஆயிரம் கொடுத்து வாங்க நோ¢டும். 
பழைய தமிழகத்தில் அடிக்கடி இப்படிப்பட்ட இன்பி·லேஷன் (Inflation) ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

எப்படி சமாளித்தார்கள்?

"இப்படியெல்லாம் நடந்ததா?" என்று சிலர் கேட்கக்கூடும். "தமிழ் மன்னர்கள் நீதி தவறாதவர்களாயிற்றே! தர்மயுத்தம் புரிபவர்களாயிற்றே!" என்றெல்லாம் சொல்வார்கள். ஏனெனில் அவர்கள் அவ்வாறு நம்புவதற்கு, எண்ணுவதற்கு - பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த Mind-set செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. வரலாற்று நாவலாசிரியர்கள் இதற்குப் பெரும் காரணமாக இருக்கிறார்கள். ஆரம்ப காலத்து திராவிட முன்னேற்றக் கழகம் இந்த மாதிரியான கருத்துக்களைப் பரப்பியது. 
நாவலிஸ்டுகள் தமிழ் மன்னர்களுக்கு எதிரியாக உள்ள கலிங்கர், சாளுக்கியர் போன்றோரை மகாக் கொடுமையாளர்களாகச் சித்தரிப்பார்கள். 
தமிழ் மன்னர்களிடையேகூட ஹீரோவாக இருக்கும் தமிழ் மன்னன் நல்லவனாகவும் வல்லவனாகவும் அவனுக்கு எதிரியான தமிழ் மன்னன் கோழையாகவும் கெட்டவனாகவும் சித்தரிக்கப்படுவார்கள். 
இதை வைத்து ஓர் ஆராய்ச்சியே செய்யலாம்.
கல்கி, சாண்டில்யன், அகிலன் ஆகியோரின் நாவல்களை ஆராயலாம்.
இதெல்லாம் ஒரு Paradigm Situation. 
தமிழ் மன்னர்கள் நார்மலான மன்னர்கள். மற்ற மன்னர்களிடம் இருந்த கொடுமை, கொடூரம், வக்கிரம், பொறாமை, வஞ்சனை, நன்றி மறப்பது போன்ற - மன்னர்களுக்குரிய ராஜலட்சண ராஜரீக குணங்கள் மற்ற இனத்து மன்னர்களைப் போலவே இருந்தது. 
இதில் வெட்கப்படவோ, வேதனைப் படவோ என்ன இருக்கிறது. 
இப்போது மாதிரியேதான்....... 
Kill... Or Get Killed.

அவர்கள் போர் தொடுத்துச்செல்லும் நாட்டைக் கொள்ளையிட்டுச் சூறையாடி நெருப்பும் இட்ட விபரத்தை அவர்கள் விலாவாரியாகக் கல்வெட்டில் வெட்டியும் வைத்திருக்கிறார்கள்; அழகாகப் பாடியும் வைத்திருக்கிறார்கள். 
விஸ்வாக்காம்ப்லெக்ஸில் 'வேளம் ஏற்றுதல்', 'தமிழக வரலாற்றை மாற்றிய போர்' ஆகிய கட்டுரைகளில் விபரங்களைத் தெளிவாகக் காணலாம்.
தண்டெடுத்துச் சென்ற நாட்டைச் சூறையாடுதல் என்பது பழங்கால போர் மரபுகளில் ஒன்று.
Loot And Arson என்றொரு சொற்றொடர் உண்டு.  இந்த ஆணையை அரசனோ படைத்தளபதியோ இட்டுவிட்டால் போர் வீரர்கள் இஷ்டப்படி செய்துகொள்ளலாம். தோற்ற மக்களைக் கொல்லலாம்; அடிமைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளலாம்; கொள்ளையடிக்கலாம்; ஊரையே 
கொளுத்திவிடலாம்.
தமிழில் 'லூட்டியடித்தல்' என்றொரு சொல் இருக்கிறது. 'Loot அடித்தல்' என்பதைத்தான் இப்படி நம்ம ஆட்கள் சொல்கிறார்கள்.
லூட் அடித்த பொருள்களை அரசனிடமோ அல்லது தண்டெடுத்துச் சென்ற தண்டநாயகனிடமோ ஒப்படைக்க வேண்டும். 
அரசனுக்குரிய பங்கு, தளபதிகளுக்குரிய பங்கு என்று எடுத்துக்கொண்டு மீதியை லூட் அடித்த போராளிக்குக் கொடுப்பார்கள்.
இது உலக வழக்கு. 
War Booty என்பது தோற்ற நாட்டிடமிருந்து கைப்பற்றிய பொருள். 
இது யுத்த தர்மப்படி நியாயமான விஷயம். 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tuesday, December 16, 2014

QUIRKS OF FATE


விதியின் விளையாட்டு





விதி என்பது எப்படி எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பது 
நினைப்பதற்கே விந்தையாகவும் விசித்திரமாகவும் அற்புதமாகவும் இருக்கும். 
இரண்டாம் உலக யுத்தத்தின்போது நடந்த சில நிகழ்ச்சிகளை 
ஏற்கனவே அகத்தியரில் எழுதியிருக்கிறேன். 

போலந்தின் தலைநகர் வார்ஸாவில் யூதர்கள் வசித்த கெட்டோ 
என்னும் சேரியிலிருந்து 1940-ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கானவர்களை 
ஜெர்மன் புயல் படையினர் கைது செய்து கொண்டுபோய் பல இடங்களில் 
உள்ள கூட்டுச்சிறைகளில் அடைத்துவைத்தார்கள். அந்த ஆறாண்டுகளில் 
அறுபது லட்சம் யூதர்கள் அழிக்கப்பட்டுவிட்டனர். வார்ஸாவில் அவர்கள் 
கைதாக்கப்பட்டு நடத்திச்செல்லப்படும்போது படம் எடுத்திருக்கிறார்கள். 
அதில் ஒரு சிறுவன் - ஆறு வயதுக்குள் இருக்கும்- தன் சிறிய கைகளை 
ஸரெண்டர் முத்திரை காட்டி, தூக்கிச்செல்வதை அந்தப் படத்தில் 
காணலாம். 
அறுபது லட்சம் பேர் மாண்டிருக்கின்றனர். 
அந்தச் சிறுவன் யுத்தம் முடியும்போது உயிருடன் இருந்தான். 

1944-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6-ஆம் தேதியை D-Day என்று 
அழைப்பார்கள். அந்தத் தினத்தன்று ஒன்பதாயிரம் கப்பல்களில் இரண்டு 
லட்சம் போராளிகள் ஆயிரக்கணக்கான டாங்க்குகள் போன்ற 
சாதனங்களுடன் நாட்ஸி ஜெர்மானியர் கையிலிருந்த பிரான்ஸ் நாட்டில் கரையிறங்கினார்கள். 

வரலாற்றிலேயே மிகவும் உக்கிரமாக நடைபெற்ற போர்களில் 
அதுவும் ஒன்று. 
அந்தப் போரின் ஆரம்பக் கட்டத்திலேயே சில ஜெர்மன் படை
வீரர்கள் பிடிபட்டனர். 
      
அவர்களில் சில கொரியாக்காரர்கள் இருந்தனர். அவர்களைப் 
பிடித்த அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சி. ஏனெனில் கொரியாக்காரர்கள் அங்கிருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை. அந்தக் கால 
கட்டத்தில் கொரியா ஜப்பானின் காலனி நாடாக அடிமைப்பட்டுக் 
கிடந்தது. ஜப்பானியர்களின் இம்ப்பீரியல் ஜப்பனீஸ் படையில் லட்சக்கணக்கான கொரியர்கள் இருந்தனர்.
அவர்கள் நாட்டிலிருந்து எண்ணாயிரம் மைல்களுக்கு அப்பால் ஜெர்மன் வெய்ர்மா·க்ட் படையின் யூனி·பார்ம் அணிந்துகொண்டு 
கொரியர்கள் பிரான்ஸ் நாட்டின் நார்மண்டிக் கரையில் என்ன 
செய்கின்றனர்?
விசாரணை செய்யும்போது அவர்களின் கதை தெரிந்தது.

1936-ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவின் வடபகுதியாக இருந்த 
மஞ்சூரியாவைப் பிடித்தது. அது ரஷ்யாவின் எல்லைப்புறம். ரஷ்யாவுடன் அந்தச் சமயத்தில் மோதல் ஏற்பட்டது. மஞ்ச்சூரியாவுக்கு ஜப்பான் 
அனுப்பிய படையில் இந்தக் கொரியர்கள் இருந்தனர். ரஷ்யப்படையிடம் அவர்கள் பிடிபட்டனர். 
ஜெர்மனி ரஷ்யாவின்மேல் திடீரென்று படையெடுத்து வெற்றி மேல் வெற்றி பெற்றது. ரஷ்யர்களுக்கு ஆள் சேதம் அதிகம்.
      அப்போது ரஷ்யர்களுக்கு ஆள் பலம் வேண்டியிருந்ததால் 
ரஷ்யப்படையில் மேற்படி கொரியர்களைச் சேர்த்து ஜெர்மானியர்களுக்கு எதிராகப் போரிட வைத்தனர். 
      அவ்வாறு அவர்கள் போரிட்டபோது ஜெர்மானியரிடம் பிடிபட்டனர். அவர்களை என்ன செய்வது என்று ஜெர்மானியர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஜப்பானியப் படையில் இருந்தவர்கள். ரஷ்யர்களிடம் 
பிடிபட்டதனால் ரஷ்யப் படையில் சேர்ந்து போரிடுமாறு ஆணையிடப் பட்டனர். அதன் பின்னர் ஜெர்மனியிடம் பிடிபட்டனர். 

அந்தச் சமயத்தில் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி பின்வாங்கிக்
கொண்டிருந்தது. ஸ்டாலின்கிராடு முதலிய பல இடங்களில் லட்சக்கணக்கான ஜெர்மன் போராளிகள் இறந்து போய்விட்டனர். 
இன்னும் பலர் காயமடைந்தனர். லட்சக்கணக்கானவர்கள் சரண
டைந்திருந்தனர். ஆட்சேதமும் பொருட்சேதமும் மிக அதிகம்.
      போதாததற்கு அமெரிக்கா, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஆகியவற்றின் 
படைகள் விரைவில் ·பிரான்ஸ் நாட்டில் கரையிறங்கவிருப்பதால் அங்கு படைகளை அதிகமாக அனுப்பவேண்டியிருந்தது. படைகளுக்கு ஆள்தேவை. ஒவ்வோர் ஆளும் தேவைதான். 
ஜப்பான் ஜெர்மனுக்கு நேசநாடு என்பதால் அந்தக் கொரியார்களை 
ஜெர்மன் படையில் சேர்த்துக்கொண்டனர்.
அவர்களின் ராசி அமெரிக்கப் படையினரிடம் சிக்கிக்கொண்டனர். 

அதன் பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் எனபது தெரியவில்லை. 
     
       இப்படியும் இருக்கலாமோ?

1945-இல் ஜப்பான் சரணடைந்துவிட்டது. 
கொரியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 

ரஷ்யா/சீனாவின் ஆதிக்கத்தில் வடகொரியா; அமெரிக்காவின் 
ஆதிக்கத்தில் தென்கொரியா. 
நம்ம கொரியாக்காரர்கள் தென்கொரியாப் படையில் சேர்க்கப்பட்டு 
சண்டையிட்டிருக்கலாம். 
அப்போதும் விதி விடாமலிருந்திருக்கும்.
வடகொரியா/சீனா படையிடம் அவர்கள் சிக்கியிருக்கலாம்.

சீனா படைகள் அருணாசல் அல்லது லடாக்கில் சண்டையிட்ட
போது அவர்கள் சீனப்பட்டாளத்தில் சேர்ந்து சண்டையிட்டிருக்கலாம். 
அப்போது இந்தியாவிடம் சிக்கியிருக்கலாம்.
அத்துடன் அவர்கள் ரிட்டயர் ஆகிவிட்டிருப்பார்கள். 
1936-இலிருந்து 1962-வரைக்கும் 26 ஆண்டுகள். 
ரிட்டயர்மெண்டு ஏஜ்தான். 
இந்தியாவில் எங்காவது செட்டில் ஆகிவிட்டிருப்பார்களா 
என்று தேடிப்பார்க்கலாம். 
       யார் கண்டது?
       அண்ணாநகர் காலனியில் கூர்க்காவாகக்கூட வேலை 
பார்த்திருக்கலாம்.
       சத்தியராஜே கூர்க்கா வேஷம் போடும்போது இவர்களுக்கென்ன? 
அசப்பில் பார்க்கும்போது இவர்களும் கூர்க்கா மாதிரியேதான் 
இருப்பார்கள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday, November 19, 2014

THE TELUGU CHOLZAS


தெலுங்கு சோழர்கள்

ரொம்ப நாளாக நான் எழுதவேண்டும் என்று நினைத்த விஷயங்களில் ஒன்று தெலுங்கு சோழர்கள் பற்றியது.
சங்க காலச் சோழர்களில் மிகவும் புகழ் வாய்ந்தவர் கரிகால் 
பெருவளத்தான் என்னும் கரிகால் சோழர். இவர் கிமு 200-இல் இருந்தார் 
என்ற பொதுவான கருத்து ஆராய்ச்சியாளர்களிடையே உண்டு. 
வடநாடுகளை நோக்கிப் படைகளை அனுப்பி, இமயமலை வரைக்கும் 
சென்று அங்கு சோழர்களுடய புலி இலச்சினையைப் பொறித்தார். செல்லும் வழியில் உள்ள நாடுகளையும் வென்றிருப்பார். எந்தெந்த நாடுகளை வென்றார் என்பதற்கு ஒன்றும் தகவல்கள் இல்லை. 
ஆனால் ஒன்று. 
பிற்காலத்தில் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் சோடர் என்னும் 
மரபினர் ஆண்டு வந்தனர். அவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மரபினர் இருந்தனர். அவர்கள் அனைவருமே தங்களைக் கரிகால் சோழரின் 
பரம்பரையினர் என்றே சொல்லிக்கொண்டனர்.
இவர்கள் கிருஷ்ணை ஆற்றுப் பிரதேசங்கள், நெல்லூர், கடப்பை 
முதலிய வட்டாரங்களில் சிறு சிறு நாடுகளை ஆண்டுகொண்டிருந்தனர். 
கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாவது இவர்கள் இந்தப் பிரதேசங்களை ஆண்டு வந்திருக்கின்றனர். 
விஜயாலயன் மரபினர் ஆண்டு வந்த சோழசாம்ராஜ்யத்தின் கீழ் 
சிற்றரசர்களாக இந்த மரபினர் அனைவருமே  விளங்கினர். அதுவும் 
சாளுக்கிய சோழராகிய முதலாம் குலோத்துங்க சோழர், சோழ 
சாம்ராஜ்யாதிபதியாகிய பின்னர் தம்முடைய உரிமை நாடாகிய வேங்கி 
நாட்டை ஒரு தெலுங்கு சோடரிடம் ஒப்படைத்தார். அங்கு படையெடுத்த மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிராக தெலுங்கு சோடர்களுக்குக் 
குலோத்துங்கர் பெரும்படையை அனுப்பி உதவினார். 
"மரபினர் மரபினர்" என்று பன்மையில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். 
எத்தனை மரபுகள்?

இவர்களில் ரொம்பவும் முக்கியமானவர்கள் வேலணாண்டி சோடர்கள்.
கிபி 1076-இலிருந்து கிபி 1216 வரைக்கும் அவர்களுக்குத் 
தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது. 
இவர்கள் குண்டூரை ஆண்டவர்கள். பின்னர் வேங்கியில் இருந்தனர் அதன் பின்னர் பித்தாபுரம் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். 
அந்த காலகட்டத்தில் ஆண்ட ஏழு வெலணாண்டி சோழ மன்னர்களில் மூன்று பேர் ராஜேந்திர சோழன் என்ற பெயரை வைத்திருந்தனர். 
பிற்காலத்தில் பாண்டியர்களுக்கும் காக்கத்தீயர்களுக்கு ஏற்பட்ட 
போர்களில் இவர்கள் ரொம்பவும் அடிபட்டனர். முடிவில் காக்கத்தீயப்
பேரரசில் இவர்கள் நாடு அடக்கப்பட்டுவிட்டது.

தெலுங்குச் சோழர்களில் இன்னொரு மரபினர் ரேணாண்டுச் சோடர். தற்காலக் கடப்பை மாவட்டத்தை ஆண்டனர். ஆரம்ப காலத்தில் 
தனியாட்சியுடன் இருந்தார்கள். பின்னர் கீழைச் சாளுக்கியர்களுக்கு 
அடியில் இருக்கலானார்கள். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பழந்தெலுங்கு 
மொழியிலேயே தங்களுடைய கல்வெட்டுக்கள் அனைத்தையும் 
முதன்முதலாக எழுத ஆரம்பித்தனர்.

இன்னொரு முக்கியமான மரபு பொத்தப்பிச் சோழர்கள். கடப்பை 
வட்டாரத்தில்தான் இவர்களும் ஆட்சி நடத்தினர். பின்னர் சித்தூர் 
மாவட்டம் வரைக்கும் அவர்கள் ஆட்சி பரவியது. 

ரேணாண்டு சோழர்களுக்குக் கிளை மரபினர் இருந்தனர். அவர்கள் 
கோனிடேன சோழர்கள் எனப்பட்டனர். குண்டூரில்தான் இவர்களும் 
ஆட்சி புரிந்தனர். சில சமயங்களில் தன்னாட்சியுடன் இருந்தனர். மற்ற சமயங்களில் ரேணாண்டு சோழர்களின் கீழ் ஆட்சி புரிந்தனர். பிற்காலத்தில் காக்கத்தீயப் பேரரசர் கணபதி ரேணாண்டு சோழர்களுடன் கோனிடேன மரபினரையும் தம்முடைய சிற்றரசர்களாக ஆக்கிக் கொண்டார். 

இன்னும் ஒரு மரபினரும் இருந்தனர். நன்னூரு சோழர்கள் என்னும் இவர்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை. 

இன்னொரு முக்கிய மரபு நெல்லூர் சோடர்கள். சோழ பிஜ்ஜனா என்பவர்தான் இந்த மரபில் முதலாவதாக அறியப்படுபவர். இவர்கள் மேலைச் சாளுக்கியர்களின் சிற்றரசர்களாக இருந்தனர். பக்கநாடு என்னும் பகுதியை ஆண்டுவந்தனர்.
திக்க சோடர் என்பவர் கிபி 1223-இல் ஆண்டவர். அவர் தம்முடைய படைகளைத் தெற்கு நோக்கிச் செலுத்தி காவிரிக் கரை வரைக்கும் 
நாட்டைப் பிடித்துக்கொண்டார்.

அவர்கள் சோழப்பேரரசுக்குப் பெயரளவில் கட்டுப்பட்டவர்கள். 
ஆனால் சுதந்திரமாகத்தான் ஆட்சி புரிந்தனர். ஏனெனில் அப்போது 
சோழப் பேரரசராக இருந்த மூன்றாம் ராஜராஜ சோழர் பாண்டிய நாட்டின் 
மாறவர்மர் சுந்தர பாண்டியரால் இருமுறை தோற்கடிக்கப்பட்டார். 
பாண்டியநாடு சுதந்திரம் பெற்றது. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு 
மைசூரிலிருந்து ஹோய்சளப் பேரரசர் வீரநரசிம்மர் தம்முடைய 
படைகளைக் கொண்டு பல்லவ கோப்பெருஞ்சிங்கன், சுந்தர பாண்டியர், 
அனியங்க பீமச் சோடர் ஆகியோர் அடங்கிய கூட்டணியை வென்று 
மூன்றாம் ராஜராஜ சோழரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார். 

ஹோய்சள வீரநரசிம்மரின் மகன் சோமேஸ்வரர் பாண்டியர்களுடன் 
சேர்ந்துகொண்டு அடுத்து வந்த மூன்றாம் ராஜேந்திர சோழரைத் தாக்கினார். 
இம்முறை தெலுங்குச் சோட திக்கர் ராஜேந்திர சோழருக்கு 
உதவியாகத் தம் பெரும்படைகளுடன் வந்து ஹோய்சளரையும் 
பாண்டியரையும் தாக்கி வென்றார். ஆனால் தொண்டை மண்டலத்தைத் தமக்கே வைத்துக்கொண்டார். 
அத்துடன் தமக்கு 'சோழ ஸ்தாபனாச்சார்யன்' என்ற விருதுப் பெயரையும் சூட்டிக்கொண்டார். 
ஆனால் திக்க சோடரின் மகன் மனுமசித்தியின் காலத்தில் நெல்லூர் 
சோடர்கள் வலுவிழந்தனர். 

கிபி 1260-இல் மனுமசித்தி சோடருக்கும் எர்ரகடபாடு நாட்டுச் 
சிற்றரசர் கட்டமராஜுவுக்கும் இடையே மிகக் கடுமையான பூசல் 
ஏற்பட்டது. 
காரணம்? 
அந்த வட்டாரத்தில் பசுமையான பெரிய மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. இவை யாருக்கு உரிமையானவை என்பதில் பூசலும் மோதலும் ஏற்பட்டன. அந்தப் பெரும்போரில் மனுமசித்தி வென்றாலும் அவருடைய முக்கிய தளபதி இறந்துபோனார். இந்தப் போரால் நாடு பெரும் சேதத்தை அடைந்தது. இதனால் மனுமசித்திச் சோடர் இறந்து போனார். 

மனுமசித்திச் சோடரின் இறப்புக்குப் பின்னர் நெல்லூர் நாடு தன்னுடைய தனித்தன்மையை இழந்தது. பிற்காலப் பாண்டியர்களுக்கும் காக்கத்தீயப் பேரரசுக்கும் இடையே நடந்த போர்களின் களமாக விளங்கியது. அடிக்கடி கைமாறியது. கடைசியில் காக்கத்தீயப் போரரசுக்குள் கரைந்துவிட்டது. 

ஏன் இந்தத் தெலுங்குச் சோடர்களைப் பற்றி எழுதினேன் என்றால், 
கிபி 1076-இலிருந்து கிபி 1248 வரைக்கும் 172 ஆண்டுகள் சோழப் 
பேரரசர்கள் எழுவரின் ஆட்சியில் ஸ்திரத்தன்மை விளங்குவதற்கும் அந்த சோழர்கள் நிம்மதியாக ஆட்சி புரிவதற்கும் இந்தத் தெலுங்குச் சோடர்கள் பெரும்பங்கு வகுத்தனர். அவர்கள் இல்லையெனில் சோழப் பேரரசு நீடித்து இருந்திருக்கமுடியாது. 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$






Saturday, November 15, 2014

SATHTHABANGGI


இராமச்சந்திர கவிராயரின் சத்தபங்கி

படத்தைப் பெரிதாக்க இமேஜின் மீது க்லிக் செய்யவும்.







$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, September 19, 2014

FAITH OVER MATTER


"தீக்குள் விரலை வைத்தால்......"

தமிழன்பன் எழுதிய 'என்னைச் செதுக்கிய சிற்பிகள்' என்னும் சிறு நூலிலிருந்து........ 

------------------------------------------------------------------------------------------- 
 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday, September 3, 2014

BESUT WEAPONS



பெஸுட் வட்டாரத்தில் வழங்கும் ஆயுதங்கள் 


கராம்பிட் எனப்படும் புலிநகம்




காப்பாக் கெச்சில்



காப்பாக் கெச்சில் பிடிக்கும் முறைகளில் ஒன்று



என்னுடைய அலங்கார காப்பாக் கெச்சில் -
வெண்கலத்தால் ஆனது



பாண்டிய இளவரசருடைய சின்னங்கள் -
கண்டரகோடரியும் யானையும்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$