Sunday, October 9, 2011

UDUMBU PIDI


உடும்புப் பிடி





         தமிழில் ஒரு பழமொழி உண்டு.

        'உடும்பு போனால் போகிறது, கைவந்தால் போதும்' 

இதற்கே இன்னொரு வடிவமும் உண்டு: 'உடும்புக்கறி வேண்டாம்;
கையை விட்டால் போதும்'.

உடும்புக்கறி சில மருத்துவ குணங்கள் உள்ளது. ஆகவே சில நோய்களுக்கு இதனைச் சாப்பிடச் சொல்வார்கள். மேலும் அது ஒரு gourmet item. விசேடமாக உண்ணப்படும் பொருள் - வௌவால் கறியைப்போல.
உடும்பு என்பது ராட்சதப்பல்லி வகையைச்சேர்ந்தது. இதிலேயே பல சாதிகள் இருக்கின்றன. 
உடும்பின் பிடி மிகவும் பிரசித்தமானது. அதன் கால்களில் மிகக்
கூரான, உட்பக்கம் வளைவான நீண்ட நகங்கள் இருக்கும். 
அக்காலத்தில் மிக உயரமான கோட்டைகளில் ஏறுவதற்கு உடும்பைப் 
பயன்படுத்தியுள்ளார்கள். அதன் இடுப்பில் கயிற்றைக் கட்டி கோட்டைச் சுவரின்மேல் எறிவார்களாம். சுவற்றில் இருக்கும் மேடு பள்ளம் பார்த்து, உடும்பு தன் நகங்களை வைத்து இறுக்கமாகப்பிடித்துக்கொள்ளும். அந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டு சுவற்றில் ஏறிவிடுவார்கள்.
உடும்புகளை வளர்த்து அவற்றை இதற்கென பயிற்சி கொடுப்பவர்களும்
இருந்தனர். 
சாம்ராட் சிவாஜியின் காலத்தில் பிரம்மாண்டமான மலைக்கோட்டைகள்
நிறைய இருந்தன. அந்த மலைக்கோட்டைகளை எவ்வகையிலும் பிடிப்பது
கஷ்டம். 
சிவாஜி தம்முடைய படையில் உடும்புப்பிரிவு ஒன்றை வைத்திருந்தார்.
உடும்புக்கு 'கோர பாதா' என்ற பெயருண்டு. கோர' என்பது கூர்மையான என்ற பொருளையும் தரும். 
மராத்திய மொழியில் உடும்பை 'கோர்பாட்' என்பார்கள். உடும்பு
வளர்ப்பவர்களை 'கோர்படே' என்று அழைப்பார்கள். இவர்களின் அணி,
சிவாஜியின் படையில் இருந்தது.
இப்போது இந்தப்பெயர், மராட்டியர்களிடையே வழங்கும் surname-களில் 
ஒன்றாக விளங்குகிறது.
திருடர்களும் உடும்பை இதே காரணத்திற்காக வைத்திருந்தார்களாம்.
மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்குள் உடும்பைப் பயன்படுத்தியே அழகர் மலைக்கள்ளன் ஒருவன் உட்புகுந்ததாகக் கூறுவார்கள். அந்தக் கள்ளன், திருமலை நாயக்கரிடம் சவாலிட்டிருந்தானாம்.
உடும்பைப் பிடிப்பதை சர்வ சாக்கிரதையாகச் செய்யவேண்டும்.
இல்லையெனில் அது நம்மைப் பிடித்துக்கொண்டுவிடும். எந்த இடத்தைப்
பிடிக்கிறதோ, அதனை விடாது. பிடித்து இழுத்தால் சதையைப் பிய்த்துக்
கொண்டு வந்துவிடும். சில சமயங்களில் ஏடாகூடமாக ஏதாவது அங்கத்தை எக்கச்சக்கமாகப் பிடித்துக்கொண்டு விட்டால் போச்சு. 'சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந்தருளுவது இனியே', என்ற கதைதான். 

இன்னும் கொஞ்சம்...அடுத்து...

        மலேசியாவில் திரங்காணு என்னும் மாநிலம் ஒன்று இருக்கிறது.
        மலாயாத் தீபகற்பத்தின் கிழக்கோரப் பிரதேசம். காடுகளும் மலைகளும்
நிறைந்த இடம். Virgin jungle என்று சொல்வார்களே. அப்படியாப்பட்ட இடம். உண்மையிலேயே அப்படித்தான். அந்த அடர்ந்த காட்டுக்குள் தனியாக நுழைந்துவிட்டால் வெளிவரமுடியாது. மதிமயக்கம் ஏற்பட்டு, வழிதவறி விடுவார்கள். மோகினிகள் கூட்டிச் சென்றுவிடுவதாகச் சொல்வார்கள். அந்த மோகினிகள் virginகளா என்பது தெரியவில்லை. இதெல்லாம் 'கண்டவர் விண்டிலர்' சமாசாரம்.
அந்த மாநிலத்தில், நடுக்காடுகளுக்கு நடுவில் ஓர் ஊர். குவாலா ப்ராங்க் (Kuala Brang) என்று பெயர். ஒரே ஒரு ரோடு.
அங்கு 1974-ஆம் ஆண்டு வேலையில் சேர்ந்தேன். 
       Humourotherapyயில் இதைப்பற்றி அதிகம் சொல்லவேண்டியிருக்கிறது.
அந்த ஊர், மூன்று ஆறுகளின் சங்கமத்தில் இருக்கிறது. ஜப்பானியர் போட்ட மரப்பாலங்கள். திரங்காணு ஆறே பெரியது.
அவ்வப்போது ஸ்பீட் போட் என்னும் படகில் ஆற்றின் வழியே மலைகளை நோக்கிச் செல்வதுண்டு. 
சில சமயங்களில் நண்பர்களும் உடன் வருவர்.
அப்படி ஒரு சமயம், நண்பர்களுடன் சென்றபோது, ஆறுமுகம்  என்ற நண்பரும் உடன்வந்தார். அவர் மாநிலத் தலைநகரின் பெரிய மருத்துவ மனையில் மருந்தகத்தின் பொறுப்பாளராக இருந்தார். மிகவும் பெரிய புள்ளி. பல இடங்களில் ரூட் போட்டுவைத்திருப்பார். மாநில இயக்குனருக்கே இல்லாத பல சலுகைகள் இவருக்குண்டு.
மானும் மயிலும் ஆடிடும் காடு
மாலை நல்நேரம் மாநதி மீது
படகில் சென்றோமே.....
உல்லாசப் படகில் சென்றோமே

என்று பானுமதி மாதிரி பாடவில்லை. சும்மா அரட்டையடித்தவாறு சென்றோம்.
அப்போது ஏதோ ஒன்று ஆற்றின் குறுக்காக வேகமாக நீந்திச் சென்றது. முதலையோ என்று முதலில் நினைத்தோம். ஆனால் தலையைத்
தண்ணீருக்கு மேல் தூக்கியவாறு அது நீந்தியது. 
அது ஒரு ராட்சத உடும்பு. இகுவானா என்று சொல்லப்படும் இனத்தில் ஒரு சாதி.

ஆறுமுகத்துக்கு உடனே வாய் ஊறிவிட்டது.
'எத்தாந்தண்டி உடும்பு; படகத் திருப்புங்க. போய்ப் பிடிப்போம்', என்று கேட்டார். படகும் கரையை நோக்கித் திரும்பியது.
அந்தப் பாழாய்ப்போன உடும்பு, கரையின்மீது சற்றுத் தொலைவில் நின்று கொண்டு, போஸ் கொடுத்துக்கொண்டிருந்தது.

ஆறுமுகம் படகைவிட்டுக் குதித்து கரையில் ஏறிச்சென்றார். 
சற்று உயரத்தில் ஓரிடத்தில் காலைவைத்தார். 'பசக்' கென்று உள்ளே சென்றது. சரியான சகதி. 'உழடு' என்று சிவகங்கைச் சீமையில் கிராமங்களில் சொல்வார்கள்.
காலை வெளியில் எடுப்பதற்காக இன்னொரு காலை நன்றாக  ஊன்றினார். இப்போது 'விலுக்'கென்று அதுவும் உள்ளே சென்றுவிட்டது. 
        தடுமாற்றத்தைத் தவிர்ப்பதற்காக வலதுகையை தரையில் ஊன்றினார். 
அதுவும் உள்ளே சென்றது.
Free-ஆக இருந்த இடது கையை - உள்ளேவிடவில்லை.
மேலே தூக்கி விசிறிக்கொண்டு அபயக்குரல் கொடுத்தார்.
அந்தப் பழிகார உடும்பு, தானிருந்த இடத்திலிருந்து கொண்டு,  சாவகாசமாகத் திரும்பி ஆறுமுகத்தைப் பார்த்தது. 
அதன் வாய் ஒருமாதிரியாக நீண்டு கீழிறங்கித் தோன்றியது.                 இளக்காரமாய்ச்  சிரித்ததா என்பது தெரியாது. கிட்டத்தில் இருந்து பார்த்தவர் ஆறுமுகம்தானே? அவருக்குத்தான் தெரியும்.
எங்களில் இருவர் படகின் நீண்ட கோலை அவரிடம் நீட்டினோம்.
இடக்கையால் பிடித்துக்கொண்டார். இழுக்கமுடியவில்லை. ஏதோ அந்தப்
பக்கமாய் பிடித்துக்கொண்டு இழுப்பதுபோல் தோன்றியது.
சகதிதான் அப்படியிழுத்தது. முடிவில் ஐந்துபேர் ஆறுமுகத்தை இழுத்துப் படகில் ஏற்றினோம்.
உடும்பு பிடித்தது போதும் என்று சொல்லி தொடர்ந்து படகைச்
செலுத்தினோம்.
அந்த உடும்பு அங்கேயே நின்றுகொண்டு படகையே பார்த்துக்
கொண்டிருந்தது.
இதுவும் ஒரு வகையில் உடும்பு பிடி தானே?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Saturday, October 8, 2011

Degeration Of Malaysian Hindu Tamils -#1

  1. மலேசிய இந்துத் தமிழர்களின் சீரழிவு -#1


மலேசியாவில் பூத வழிபாடு, பேய் வழிபாடு, முனி வழிபாடு முதலியவை மிக அதிகமாக ஆகிக்கொண்டிருக்கின்றன. Black Magic, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றின்மீதும் அதீத நம்பிக்கை. ஆகவே இங்கு சாமியாடிகள், போமோக்கள் எனப்படும் மாந்திரீகர்கள், மந்திரவாதிகள் மிக அதிகமாக உள்ளனர். 
இந்த மாதிரி சூழ்நிலைகளின் நேரடியான விளைவுகளும் ஏராளமாக இருக்கின்றன. 
தாயத்துக்கள், மந்திரித்த கயிறுகள், ரட்சைகள், தகடுகள் போன்றவை ஏராளமாக விற்கப்படுகின்றன. 
இன்னொன்றும் உண்டு. 
அடிக்கடி செய்யப்படும் சத்துரு சங்கார ஹோமங்கள்.
ருத்ர பிரத்தியங்கிரா ஹோமம்.
நல்லவேளை.
இன்னும் மலேசியாவில் வேறு யார் ஒருவருக்கும் வாராஹிதேவி கைவசமாகவில்லை. 
தஞ்சாவூருக்கு ஏராளமானோர் போகிறார்கள். அங்கு பெரிய கோயிலில் உள்ள வாராகியம்மனை வழிபட்டுவிட்டு வருகிறார்கள். 
ஆனால்......
இங்குள்ள எந்த பூசாரியுமோ சிவாச்சார்யாரோ தாம் வாராஹியை வசப்படுத்திவைத்திருப்பதாகவோ உபாசனை செய்வதாகவோ சொல்லிக் கொள்ளக் காணோம்.
பல ரகசியங்கள் அவர்களுக்கெல்லாம் தெரிவதில்லை. 

சூரிய புராணத்தில் பார்த்துகொள்ளுங்கள். அப்பட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறது.


இந்துக்களிடம் மட்டும் இந்த மாதிரிப்பட்ட நம்பிக்கைகள் என்று எண்ணிவிடாதீர்கள்.
மலாய்க்காரர்களிடம் இந்த நம்பிக்கைகள் மிக அதிகம். 
இப்போதெல்லாம் மலேசியாவில் எடுக்கப்படும் மலாய்ப்படங்களில் நான்கில் ஒன்று பேய்க் கதைப் படங்கள்.
நன்றாக ஓடுகின்றன. 
எப்போதுமே பேயாக நடிப்பவள் மிக அழகிய பெண்ணாக இருப்பாள். மோகினியாக வந்துதான் மயக்கவேண்டும் என்பதில்லை. 
இதைப் பார்த்துவிட்டு தமிழாள் ஒருவர் சில பேய்ப்படங்களை எடுத்தார். அவருடைய பெயர் P. ஸோயன்ஸோ. தொடர்ச்சியாகப் பேய்ப் படங்களையே எடுத்ததால் அவருக்குப் பேய் ஸோயன்ஸோ 
என்றாகிவிட்டது.
இந்த நாட்டு சமய இயக்கங்களின் தலைவர்களுக்கு இந்து சமயத்தைப்பற்றிய ஞானம் அறவே போதாது. ஏதோ பதவிகள்; அல்லொக்கேஷன்: வெளிநாட்டுப் பயணம்; மாலை மரியாதை..... 
இதற்காகத்தான் அவர்கள் இருக்கிறார்கள்.
ஆகையால்தான் இந்து சமயம் பற்றிய சரியான தகவல்கள், ஞானம், அறிதல், புரிதல், தெரிதல் முதலியவை அறவே கிடையாது. மக்களிடையே அவை அறவே இல்லாமற் போய்க்கொண்டிருக்கின்றன.
பூசாரிகள், மந்திரவாதிகள், சாமியாடிகள், ·பிராடு சித்தர்கள் முதலியவர்கள் சொல்வதைக் கேட்டு, அறிவு மழுங்கி அறிவு மயங்கி இருக்கிறார்கள்.
Hopeless Case!!!!!!


^^^^^^^^^^^^^^^^^^^^

Wednesday, October 5, 2011

KAMBAN'S SARASWATHI ANDHADHI

கம்பரின் சரஸ்வதி அந்தாதி




காப்பு 


ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் 
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய 
உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தின் உள்ளே 
இருப்பள் இங்கு வாராது இடர். 


படிக நிறமும் பவளச்செவ் வாயும் 
கடிகமழ்பூந் தாமரைபோல் கையும் - துடியிடையும் 
அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால் 
கல்லும் சொல் லாதோ கவி. 


கலித்துறை 


சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமல ஆசனத்தேவி செஞ்சொல் 
தார்தந்த என்மனத் தாமரையாட்டி சரோருக மேல் 
பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள் 
வார்தந்த சோதி அம்போருகத் தாளை வணங்குதுமே. .. 1 


வணங்கும் சிலைநுதலும் கழைத்தோளும் வனமுலை மேல் 
சுணங்கும் புதிய நிலவெழு மேனியும் தோட்டுடனே 
பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமன் அன்பால் 
உணங்கும் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. .. 2 


உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித் 
தரைப்பால் ஒருவர் தரவல்ல ரோ-தண் தரளமுலை 
வரைப்பா ல்அமுதுதந் திங்குஎனை வாழ்வித்த மாமயிலே 
விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. .. 3 


இயலா னதுகொண்டு நின்-திரு நாமங்கள் ஏத்துதற்கு 
முயலா மையால்-தடு மாறுகின்றேன் இந்த மூவுலகும் 
செயலால் அமைத்த கலைமகளே நின்திரு வருளுக்கு 
அயலா விடாமல் அடியேனையும் உவந்து ஆண்டருளே. .. 4 


அருக்கோதயத்தினும் சந்திரோதயம் ஒத்த அழகெறிக்கும் 
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான் 
இருக்கு-ஓதுநாதனும் தானும்-எப் போதும் இனிது இருக்கும்
மருக்கோல நாண்மல ராள்-என்னை யாளும் மடமயிலே. .. 5 


மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே 
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூர்- இருள்கோர் 
வெயிலே, நிலவெழு மேனிமின் னே, இனி வேறுதவம் 
பயிலேன் மகிழ்ந்து பணிவேன்-உனதுபொற் பாதங்களே. .. 6 


பாதாம் புயத்தில் பணிவார் தமக்குப் பலகலையும் 
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி,வெள் ளிதழ்ப்பூஞ் 
சீதாம் புயத்தில் இருப்பாள் இருப்ப-என் சிந்தையுள்ளே 
ஏதாம் புவியில் பெறலரிது ஆவதெனக்கு இனியே. .. 7 


இனிநான் உணர்வது எண்ணெண் கலையாளை, இலகுதொண்டைக் 
கனிநாணும் செவ்விதழ்வெண்ணிறத் தாளை,க் கமலவயன் 
தனிநாயகியை, அகிலாண்ட மும்பெற்ற தாயை,மணப் 
பனிநாண் மலர்-உறை பூவையை ஆரணப் பாவையையே. .. 8 


பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா 
மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்-விதியின் முதிய 
நாவும், பகர்ந்த தொல் வேதங்கள்-நான்கு, நறுங்கமலப் 
பூவும், திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே. .. 9 


"புந்தியில் கூரிருள் நீக்கும்புதிய மதியம்" என்கோ 
"அந்தியில் தோன்றிய தீபம்" என்கோ, நல்லரு மறையோர் 
சந்தியில் தோன்றும் தபனப்-என்கோ, மணித்தாமம் என்கோ 
உந்தியில் தோன்றும் பிரான்புயம் தோயும் ஒருத்தியையே. .. 10 


ஒருத்தியை யன்றும்-இலா என் மனத்தினு வந்துதன்னை 
இருத்தியை, வெண்கமலத் திருப்பாளை எண்ணெண் கலைதோய் 
கருத்தியை, ஐம்புலனுங் கலங்காமல் கருத்தை யெல்லாம் 
திருத்தியை, யான்மற வேன்-திசை நான்முகன் தேவியையே. .. 11 


தேவரும் தெய்வப் பெருமானும் நான்மறை செப்புகின்ற 
மூவரும் தானவரா கியுள் ளோரும்-முனி வரரும் 
யாவரும் ஏனைய எல் லாவுயிரும் இதழ் வெளுத்த 
பூவரும் மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. .. 12 


புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை 
அரிகின்றது  ஆய்கின்ற எல்லா அறிவினரும் பொருளைத் 
தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம்தெ ளிந்துமுற்ற 
விரிகின்றது எண்ணெண் கலைமா னுணர்த்திய வேதமுமே. .. 13 


வேதமும் வேதத்தின் அந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம் 
பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும் 
போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து 
நாதமும் நாதவண் டார்க்கும்வெண்தாமரை நாயகியே. .. 14 


நாயக மான மலரக மாவதுஞான இன்பச் 
சேயக மான மலரக மாவதும் தீவினையால் 
லேயக மாறி விடும்-அக மாவதும் எவ்வுயிர்க்கும்
தாயக மாவதும் தாதுஆர்-சுவேதச ரோருகமே. .. 15 


சரோருக மேதிருக் கோயிலும் கைகளும் தாளிணையும் 
உரோரு கமும்-திரு வல்குலும் நாபியும் ஓங் கிருள்போல் 
சிரோருகஞ் சூழ்ந்த வதனமும் நாட்டமுஞ் சேயிதழும் 
ஒரோருகம் ஈரரை மாத்திரை யானவுரை மகட்கே. .. 16 


கருந்தா மரைமலர் கள்தாமரை மலர்,கா மருதாள் 
அருந்தா மரைமலர் செந்தாமரை மலர்-ஆ லயமாத் 
தரும்தா மரைமலர் வெண்தாமரை மலர்தாவி லெழில் 
பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. .. 17 


தனக்கே துணிபொருள் என்னும் தொல்வேதம் சதுர்முகத்தோன் 
எனக்கே சமைந்த அபிடேகம் என்னும் இமையவர்தாம் 
மனக்கேதம் மாற்றுமருந்து என்ப, சூடும்மலரென் பன்-யான் 
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. .. 18 


கமலந்தனில் இருப்பாள் விருப்போடு அங்கரங் குவித்துக் 
கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக் 
கமலந்தனைக் கொண்டுகண் டொருகால் தங்கருத்துள் வைப்பார் 
கமலங் கழிக்கும் கலைமங்கை யாரணி காரணியே. .. 19 


காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும் 
நாரணன் ஆகம் அகலாத் திருவும் ஒர் நான்மருப்பு 
வாரணன் தேவியும் மற்றுள்ள தெய்வ மடந்தையரும் 
ஆரணப் பாவை பணித்தகுற் றேவல் அடியவரே. .. 20 


அடிவேத நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும்
முடிவே, தவளமுளரி மின்னே, முடியா இரத்தின 
வடிவே, மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின் 
விடிவே, அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே. .. 21 


வேறிலை யென்றுன் அடியாரில் கூடி விளங்குநின்பேர் 
கூறிலை யானும் குறித்துநின்றேன் ஐம்புலக் குறும்பர் 
மாறிலை கள்வர் மயக்காமல் நின்மலர்த்தாள் நெறியில்
சேறிலை ஈந்தருள் வெண்தா மரைமலர்ச் சேயிழையே. .. 22 


சேதிக்க லாம்-தர்க்க மார்க்கங்கள் எவ்வெவர் சிந்தனையும் 
சோதிக்க லாம்-உறப் போதிக்க லாம்-சொன்ன தேதுணிந்து 
சாதிக்க லாம் மிகப் பேதிக்க லாம்-முத்திதா னெய்தலாம் 
ஆதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. .. 23 


அடையாளம் நாண்மலர் அங்கையில் ஏடு மணிவடமும் 
உடையாளை நுண்ணிடை யன்றும் இலாளை, உபநிடதப் 
படையாளை, எவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும் 
தொடையாளை, அல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. .. 24 


தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தம்தொழில் மறந்து 
விழுவார் அருமறைமெய் தெரிவார் இன்பமெய் புளகித் 
தழுவா ரினும் கண்ணீர் மல்குவார் என்கண் ஆவ தென்னை 
வழுவாத செஞ்சொல் கலைமங்கை பால-அன்பு வைத்தவரே. .. 25 


வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளும்அற்று எப்பொருளும் 
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல; பூதலத்தின் 
மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும் 
உய்க்கும் பொருளும் கலைமான் உணர்த்தும் உரைப்பொருளே. .. 26 


பொருளால் இரண்டும் பெறலாகும் என்றபொருள் பொருளோ, 
மருளாத சொற்கலை வான்பொருளோ, பொருள் வந்து,வந்தித்து 
அருளாய் விளங்கும் அவர்க்கு ஒளியாய் அறியாதவருக்கு 
இருளாய் விளங்கு நலங்கிளர் மேனி-இலங் கிழையே. .. 27 


இலங்கும் திருமுக மெய்யில் புளகம்எழுங் கண்கள்-நீர் 
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனம்மிகவே 
துலங்கு முறுவல் செயக் களிகூரும் சுழல்புனல்போல் 
கலங்கும் பொழுது தெளியும் சொன்மானைக் கருதினர்க்கே. .. 28 


கரியார் அளகமும் கண்ணும் கதிர்முலைக் கண்ணும்செய்ய 
சரியார் கரமும் பதமும் இதழும்தவள நறும் 
புரியார்ந்த தாமரையும் திருமேனி யும்பூண் பனவும் 
பிரியா தென் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே. .. 29 


பெருந்திருவும் சயமங் கையும்ஆகி என்பேதை நெஞ்சில் 
இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றின் எல்லா உயிர்க்கும் 
பொருந்திய ஞானம் தரும் இன்பவேதப் பொருளும் தரும் 
திருந்திய செல்வம்தரும் அழியாப் பெரும் சீர்தருமே. .. 30 




$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$