Thursday, July 24, 2014
Saturday, May 24, 2014
UNWANTED SPECIAL KNOWLEDGE
வேண்டப்படாத அரிய தகவல்
கோலாலும்பூர் பத்து மலை
மலேசியாவின் முக்கிய முருகன் தலங்களில் ஒன்றாக உள்ளது
கோலாலும்ப்பூரின் பத்து மலை - Batu caves.
'Batu என்றால் மலாய் மொழியில் 'பாறை' அல்லது 'கல்'.
அது ஒரு பெரிய சுண்ணாம்புப் பாறை- limestone; அதுதான் குன்றாக
நிற்கிறது.
பன்னெடுங்காலமாக அந்த குன்றின்மீது விழும் மழை, படியும் பனி
ஆகியவை எப்போது வடிந்துகொண்டேயிருக்கும்.
அதன் காரணத்தால் பெரும் பெரும் துளைகள், துவாரங்கள், குகைகள், குடம்புகள், stallagmites, stallagtites ஆகியவற்றைக் காணலாம்.
18-ஆம் நூற்றாண்டில் அந்தக் குன்றில் உள்ள பெரிய குகையொன்றில் முருகனை வழிபடலாயினர்.
அந்த வழிபாடு நாளடைவில் மிகச்சிறப்புப் பெற்றுவிட்டது. இப்போது தைப்பூசத்தின்போது பத்து லட்சத்துக்கு மேல் மக்கள் கூடும் விழா அங்கே
நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பால்குடங்களும் காவடிகளும் அங்கு எடுக்கப்படுகின்றன.
சாதாரண நாட்களிலும்கூட அது ஒரு முக்கியமான பயணிகள் கேந்திரமாக விளங்குகிறது.
2001-ஆம் ஆண்டில் ஒருநாள். அது ஒரு விசேடமான நாள். அந்த நாளன்று ஒரு குறிப்பிட்ட நேரம் அதி முக்கியமானது.
அதை எத்தனையோ ஆண்டுகள் பஞ்சாங்கங்களைப் பார்த்தும் வான
சாஸ்திரக் கணக்குகளையும் போட்டு செய்த கண்டுபிடிப்பு.
ஆகவே அன்று பத்துமலைக்குச் சென்றிருந்தேன்.
அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே அங்கு சென்றுவிட்டோம்.
தாகசாந்தி செய்துகொள்ளலாம் என்று அங்கிருந்த ஹோட்டலில் தேநீர் அருந்தச்சென்றோம். அங்கு, பக்கத்து மேசையில் நான்கு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவ்வப்போது சில தமிழ்ப்பாட்டுக்களைச் சொல்லி
ரசித்துக்கொண்டிருந்தனர்.
அங்கிருந்து வரும்பொது அந்த பெண்களிடம் அந்த தினத்தின்
முக்கியத்துவத்தைச் சொல்லிவிட்டு வந்தேன். அவர்கள் நிமிர்ந்து பார்த்து
விட்டு, "அப்படியா?" என்றார்கள்.
அதன் பிறகு நாங்கள் படிகளில் ஏறி குகைக்குச் சென்றோம்.
அங்கு திரிந்த தமிழர்களிடம் சொன்னால் எடுபடாது என்ற அச்சம்.
எடுபடக்கூடிய தமிழர்களாக அங்குள்ளவர்கள் தோன்றவில்லை.
ஆகவே அங்கிருந்த இரண்டு வெள்ளைக்காரப் பெண்மணிகளிடம்
சொன்னேன்.
முதல் பெண், நான் சொல்லச் சொல்ல நகர்ந்து பின்பக்கமாகப் போனாள்.
அடுத்தவள் பிரிட்டிஷ்காரி. கொஞ்சம் ஆர்வம் காட்டினாள். இன்னொரு
ஜப்பானிய இளைஞனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டான்.
அதன்பின்னர் அங்கிருந்து திரும்பி வரும்போது, ஒரு கறுப்புப் பையைத்
தோளில் தொங்கப்போட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சிறிய சிறிய
பிளாஸ்ட்டிக் பைகளில் இருந்த ஏதோ பொருள்களை வருகிறவர்
போகிறவர்களிடம் விற்றுக்கொண்டிருந்தான்.
கோயில் வாசலில் ஒரு நரிக்குறவன். அவன் வியாபார மும்முரத்தில்
இருந்தான். செத்த நரியின்றின் மண்டைத்தோலை உரித்து விலக்கி, அதன்
மண்டையோட்டில் நீட்டிக்கொண்டிருந்த முட்களைக் காட்டி, 'நரிக்
கொம்பு'களை விற்றுக்கொண்டிருந்தான்.
அங்கிருந்து வரும்போது, கைரேகை ஜோதிடம் சொல்வதாக ஒருவர்
அந்தப் பக்கத்தில் ஒரு ஸ்டாலில் ஒரு மேசையைப் போட்டுக்கொண்டு
அமர்ந்திருந்தார். அவரிடம் கையை நீட்டிய ஓர் ஆளின் உள்ளங்கையைப்
பார்த்துவிட்டு, அதனை இன்னும் நன்றாகப் பார்க்கவேண்டும் என்பதற்காக
ஒரு பூதக்கண்ணாடியைத் தன்னுடைய கறுப்புத் தொங்கு பையிலிருந்து
எடுத்தார்.
அவரின் இடத்தைத் தாண்டி நாங்கள் இளநீர் அருந்த ஸ்டாலுக்குச்
சென்றோம். சற்று நேரத்தில் அந்த நரிக்குறவன் தோளில் ஒரு கறுப்புப் பையைத் தோளில் தொங்கப்போட்டுக்கொண்டு வியாபாரம் முடிந்து சென்று
கொண்டிருந்தான்.
அந்த அற்புதமான விஷயத்தை யாரிடமும் சொல்வதற்குக்கூட முடியவில்லையே. சொன்னாலும் கேட்பாரில்லை. புரிந்துகொள்ளக்கூடியவர்களிடம்
மட்டும்தான் அதைச் சொல்லலாம்.
அடேயப்பா! எப்பேற்பட்ட விஷேமான விஷயம்!!!
எனக்கு மனதில் ஓர் அடி. 'என்னடாது. எவ்வளவு பெரிய விஷயத்தை
இவர்களிடம் சொல்கிறோம். சற்றும் எடுபடவேயில்லையே?'
மனத்தாங்கலுடன் காரில் ஏறினேன்.
ஏறுமுன் என் தோளில் தொங்கிக்கொண்டிருந்த பையை - கறுப்புபையை -
பின்ஸீட்டில் போட்டேன்.
திரும்பிச்சென்றேன்.
இப்போது பதின்மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த ஆண்டுக்கு உண்டான ஆந்த விசேஷ நாளும் சென்று விட்டது.
இந்தப் பதின்மூன்று ஆண்டுகளில் யாரிடமும் அந்த விசேஷத்தைச்
சொல்லவில்லை. சொல்லவும் தோன்றவில்லை
இப்போது Retrospection -இல் பார்க்கும்போது, அதைச் சொல்லாமல்
விட்டது நல்லதுக்குத்தான். ஏனெனில் அதை வைத்து கமர்ஷியலைஸ்
செய்துவிடுவார்கள். விழா நடத்துவார்கள். காவடி எடுப்பார்கள், பால்குடம் எடுப்பார்கள். யாராவது வீஐப்பீயை அழைத்துப் பரிவட்டம் கட்டுவார்கள்.
எனக்கும் அந்த மலையில் உள்ள சித்தர்களுக்கும் மட்டுமே
தெரிந்ததாக இருக்கட்டும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Thursday, May 15, 2014
13
13
Octophobia என்பது எட்டைக் குறித்த பயம்.
ஐரோப்பியர்கள் கிரிஸ்துவர்களாக மாறுவதற்கு முன்னர் ஷாமானிஸம், பேகனிஸம், கெல்த்திய மதம், நார்ஸ் மதம் போன்ற மதங்கள் இருந்தன.
பதின்மூன்று எண் பழைய கெல்த்திய, பண்டைய ஐரோப்பிய சமயத்தில் முக்கியமானதாக இருந்தது.
பதின்மூன்றாம் நாள் முக்கியமான நாளாகவும் புனிதமான நாளாகவும் இருந்தது.
கெல்த்திய சமயத்திலிருந்து கிரிஸ்த்துவ மதத்துக்கு ஐரோப்பியர்கள்
மாறியபோது கெல்த்திய மத சம்பிரதாயங்களுக்கு பயங்கரமான
தோற்றத்தையும் ஏற்படுத்தி, அவற்றைப் பற்றிய பயங்கரமான கருத்துக்களைப் பரப்பிவிட்டார்கள். அந்த மதத்தின் கூறுகளை Wiccaan, Witchcraft, Sorcery போன்றவற்றைச் சேர்ந்தவையாகக் கருதுமாறு ஏற்படுத்திவிட்டார்கள். இவையெல்லாம் மாந்திரீக வாதத்தைச் சேர்ந்தவை.
கெல்த்திய மதத்தில் புனிதமாக இருந்த பல விஷயங்களை சாத்தானியக் கலாச்சாரமாகக் கருதச் செய்துவிட்டார்கள்.
பதின்மூன்றுக்கு ஏதோ விசேஷமான கூறுகள் இருக்கின்றன என்பது
வாஸ்தவம்தான்.
பதின்மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் அதை மாந்திரீகவாதினிகளுடைய(Witches) முக்கிய நாளாகக் கருதுவார்கள். அது ஏதோ சூனியம் நிறைந்த நாள் என்று தற்கால ஐரோப்பியர்கள் கருதுவார்கள். அதனை Witches Sabbath என்றும் அழைப்பார்கள்.
இந்தச் சேர்க்கையானது Witchcraft, Satanic Worship ஆகியவற்றிற்கு முக்கியமானது. நம்முடைய சம்பிரதாயத்தில் வெள்ளிக்கிழமையும்
அமாவாசையும் சேர்வது குறித்து பல விசேஷங்கள் உண்டு.
அகத்தியர் யாஹ¥ மடற்குழுவில் Tridecaphobia, Friday 13, வெள்ளிக்
கிழமை அமாவாசை முதலியவற்றைப் பற்றிய சில மடல்கள் இருக்கின்றன.
அமெரிக்கர்கள் அப்போலோ விண்கலங்களை வெற்றிகரமாக
செலுத்திக்கொண்டிருந்தபோது அந்த வரிசையில் அப்போலோ 13
இருப்பதைக் குறித்து அந்த எண்ணுக்காக அஞ்சினார்.
அதுவும் கோளாறாக முடிந்தது. இன்னும் நிறைய 13ஐப் பற்றி சொல்லலாம்.
ஏசு பெருமானார் தம்முடைய பன்னிரண்டு சீடர்களுடன் இருந்து
கடைசி பாஸோவர் விருந்தை உண்டார். அத்துடன் சீடன் யூதாஸை அவர் வெளியில் அனுப்பினார். சற்று நேரத்தில் விருந்து முடிந்த பின்னர், யூதாஸ் சில போர் வீரர்களுடன் வந்தான். அவன் ஏசு பெருமானாரின் கன்னத்தில் முத்தமிட்டான். அதையே அடையாளாகவும் சைகையாகவும் கருதிய போர்வீரர்கள் ஏசு பெருமானாரைக் கைது செய்தனர். பின்னர் அவர் சித்திரவதைகளுக்குப் பின்னர் சிலுவையில் அறையப்பட்டார். யூதாஸ¤ம் தூக்குப் போட்டுக் கொண்டான்.
பதிமூன்றைப் பற்றி பயப்படுவதற்கு இந்தக் கதையையும் காரணமாகச் சொல்வார்கள்.
ஆனால் நம்முடைய ஆகம புராணங்களில் பதின்மூன்றைப் பற்றி
ஏதும் பயம் இருப்பதாகத் தெரியவில்லை.
சீனர்கள் பதிமூன்றுக்குப் பயப்படுவார்கள். அவர்கள் பயப்படுவதன்
காரணம் வேறு.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Monday, April 28, 2014
JACKAL
ஓநாயின் நாள் -
DAY OF THE JACKAL
Frederic Forsythe பற்றி எழுதிக்கொண்டிருந்தேன்.
அவர் எழுதிய கதைகளிற் சில, படங்களாக வந்துள்ளன. Day Of The Jackal, Odessa File, Dogs Of War ஆகியவை நினைவுக்கு வருகின்றன. ஜாக்கால் கதையின் தொடர்ச்சி கூட வந்தது. ப்ரூஸ் வில்லிஸ் நடித்த படம். அதன் ஒரிஜினலில்
ஜாக்கால் பாத்திரத்தில் Edward Fox நடித்திருப்பார். காந்தி படத்தில் ஜாலியன் வாலா பாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டையராக நடித்த அதே ஆசாமிதான்.
'The Afgan' புத்தகத்துக்கு முன்னர் 'The Veteran' என்னும் புத்தகத்தை எழுதி யிருக்கிறார். அது நான்கு குறுநாவல்களைக் கொண்டது. இரண்டு சிறுகதைத்
தொகுப்புகளும் உள்ளன.
·பார்ஸித் எழுதியவற்றில் மிகச் சிறந்ததாகச் சொல்லப்படுவது ஜாக்கால் கதைதான். அதை ஒட்டி ஒடெஸ்ஸா ·பைல் வரும்.
இரண்டு நூற்றாண்டுகளாகக் கஷ்டப்பட்டு உலகத்தின் முக்கிய பகுதிகளில் பல காலனிகளை ·பிரான்ஸ் பிடித்து, சேர்த்து வைத்து ஆண்டு கொண்டிருந்தது. பல ஆ·ப்ரிக்க நாடுகள், இந்தோசீனா, க்யானா, மொரோக்கோ, அல்ஜீரியா என்று இங்கும் அங்குமாக இருந்தன.
இரண்டாம் உலக யுத்த முடிவில் காலனித்துவ
எதிர்ப்பு உலகெங்கும் ஓங்கியது.
இந்தோச்சீனாவை உலக யுத்தத்தின்போது ஜப்பானியர் கைப்பற்றி யிருந்தனர். ஜப்பான் தோல்வியுற்ற பின்னர் இந்தோச்சீனாவை ·பிரான்ஸ் மீண்டும் தன் ஆட்சிக்குள் கொண்டுவர முற்பட்டது.
ஆனால் ஹோச்சீமின் என்னும் வியட்நாமியப் பொதுவுடைமைத் தலைவரின் படைகளுடன் டியென் பியென் பூஹ் என்னும் இடத்தில் ஏற்பட்ட போரில் ·பிரான்ஸ் படுதோல்வியுற்றது.
·பிரான்ஸ் அந்த வாக்கில் இந்தோசீனாவைக் கைவிட்டுவிட்டு வெளியேறியது.
இந்தப் போரில் முக்கிய பங்கெற்ற படைப் பிரிவு French Foreign Legion என்பது.
·பிரெஞ்சுக்காரர் அல்லாத பிற நாட்டினர்கள் சேர்ந்த படைப் பிரிவு அது.
அதில் சேர்பவர்களின் விபரங்கள் அதிரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். ஆகவே எங்கெங்கிருந்தோ ஓடி வந்தவர்களெல்லாம் ·பாரின் லீஜனில் இருந்தனர். பிடிபடாத நாட்ஸி ஜெர்மானியர் பலர் இருந்தனர்.
அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கி நல்ல வருமானத்தையும் கொடுத்து ·பிரான்ஸ் வைத்திருந்தது. பயங்கரக் குற்றவாளிகள், முரடர்கள், கொலை வெறியர்கள் போன்றோரெல்லாம் இருந்தனர். ஆனால் அதைவிட கடுமையான கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் லீஜன் படையில் இருந்தன. ஆகவே லீஜனில் ஒழுங்கும் கட்டுப்பாடும் அதிகம். போர் என்று வந்தால் மிகக்
கடுமையாகப் போரிடுவார்கள். ·பாரின் லீஜன் அதன் பயங்கரத்துக்குப் பேர் போனதாக விளங்கியது.
எப்போதுமே வெற்றி பெற்று வந்த படை அது.
அப்பேற்பட்ட படையை வியட்நாமியர்கள் தோற்கடித்தனர்.
இந்தோச்சீனாவைத் தொடர்ந்து வட ஆ·ப்ரிக்காவில் உள்ள அரபு நாடாகிய அல்ஜீரியாவில் புரட்சி ஏற்பட்டது. அல்ஜீரிய விடுதலைப் படையுடன் ஏற்பட்ட போர்களில் ·பிரான்ஸ¤க்கு அதிக சேதம்.
அல்ஜீரியாவும் டூனீஸியாவும் மொரோக்கோவும் மத்தியதரைக்கடலில் ·பிரான்ஸ¤க்கு எதிர்க்கரையில் இருந்தன. அவற்றின் கடற்கரை ஓரப் பிரதேசங்கள் வெப்பம் அதிகம் இல்லாமல் நன்றாக வளமாக இருந்தன.
தென் ·பிரான்ஸின் சீதோஷ்ண நிலையை அனுசரித்து இருந்தன.
ஆகவே அந்த இடங்களில் ·பிரெஞ்சுக்காரர்கள் ஏராளமாகக் குடியேறி யிருந்தனர். திராட்சைத் தோட்டம் அது இது என்று தடபுடலாக வாழ்ந்து வந்தனர்.
அல்ஜீரியாவைட்டு ·பிரான்ஸ் அகன்றுவிட்டால் அங்கிருந்த ·பிரெஞ்சுக் காரர்கள் பாடு அதோகதிதான். ஆகவே அவர்களும் படையைத் திரட்டிக் கொண்டு அரபுகளுடன் போரிட்டுக்கொண்டிருந்தனர். ·பிரான்ஸின்
தீவிர வலதுசாரிகள் இவர்களை ஆதரித்தனர்.
ஆளாளுக்கு கெரில்லாப் போர்களைப் புரிந்துகொண்டிருந்தனர்.
·பிரான்ஸின் நிலைமை நாளுக்கு நாள் படுமோசமாகிக்கொண்டிருந்தது.
·பிரான்ஸின் அரசு அடிக்கடி மாறிக் கொண்டிருந்தது. அதன் நாணய மதிப்பும் குறைந்து பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டது. அடிக்கடி அரசுகள் கவிழ்ந்துகொண்டேயிருந்தன.
அப்போது சார்ல்ஸ் தெ கால் Charles de Gaulle என்னும் மாஜி தளபதி ஆட்சியைக் கைப்பற்றினார்.
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனிலிருந்து ·பிரெஞ்சுப் படையைத் திரட்டிக்கொண்டு ·பிரான்ஸில் இருந்த ஜெர்மானியருடன் போரிட்டவர். பாரிஸை விடுவித்தவர்.
உலக யுத்த முடிவில் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிக்கொண்டவர்.
·பிரான்ஸை மீண்டும் காப்பாற்றவேண்டி அவர் ஆட்சியைப் பிடித்துக்கொண்டார்.
·பிரான்ஸை நிலைநிறுத்துவதற்கு இருந்த வழி, அதனுடைய காலனிகளுக்கு சுதந்திரம் கொடுப்பதுதான். அந்த நாடுகள் விரும்பினால் ·பிரான்ஸ் நாட்டின் மாநிலமாக விளங்கலாம். கடலுக்கப்பாலுள்ள மாநிலங்கள் என்ற விசேஷப் பிரிவில் பல குட்டிநாடுகள் வந்தன.
இருப்பனவற்றில் அல்ஜீரியாவே சிக்கல் மிகுந்ததாக இருந்தது. ஏனெனில் அதைத் தாய்நாடாகக் கொண்டிருந்த ·பிரெஞ்சுக்காரர்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்தனர். அவர்களோ சுதந்திரத்தை வெறுத்தனர்.
தே கால் வரிசையாக எல்லாக் காலனிகளையும் விடுவிக்க ஆரம்பித்தார்.
அல்ஜீரியாவுக்கும் சுதந்திரம் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
இதை நிறுத்தவேண்டுமானால் ஒரே வழிதான். தே காலைப் போட்டுத் தள்ளுவது.
மலேசியத் தமிழ் கலாச்சாரப்படி "தூக்குங்கடா அவன!".
தே காலைத் தூக்குவதற்குப் பெரும்பணத்தை எப்படியோ திரட்டி ஒரு கொலையாளியை ஏற்பாடு செய்து வலச்சாரியினர் அனுப்பினர்.
அந்த ரகசியக் கொலையாளியின் பெயர் யாருக்கும் தெரியாது.
Chakal என்ற பெயரால் அவன் விளங்கினான். ஆங்கிலத்தில் Jackal. அதாவது ஓநாய்.
தெ காலைக் கொலைசெய்ய ஜாக்கால் செய்த முயற்சி, போட்ட திட்டம், அதை ஸ்பெஷல் டிட்டெக்டிவ் ஒருவர் முறியடித்து அவனைக் கொன்றது.....
இதுதான் Day Of The Jackal கதை.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Wednesday, January 22, 2014
THIRUNEERRU THIRUPADHIGAM
திருநீற்றுத் திருப்பதிகம்
பின்னணியும் மூலமும் எளிய உரையும்
விளக்கங்களுடன்
விளக்கங்களுடன்
தமிழ்ச் சைவசமயத்திலுள்ள மிகச்சிறந்த மந்திர துதிகளில்
ஒன்றாகக் கருதப்படுவது திருஞானசம்பந்தரின் திருநீற்றுத் திருப்பதிகம்.
இதன் பின்னணி எல்லாருக்கும் தெரியும் என்று ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை.
சமணர்களை ஒடுக்கி பாண்டிய மன்னரைச் சைவராக்கி,
அதன்மூலம் பாண்டியநாட்டையும் சைவநாடாக்குவதற்காக சம்பந்தப்
பெருமானார் மதுரைக்கு வந்தபோது, அவர் தங்கியிருந்த திருமடத்திற்கு
சமணர்கள் நெருப்பிட்டனர்.
அவர் தம்முடைய ஆற்றலால் சிவனை வேண்டி அந்த நெருப்பின்
தகிப்பை வெப்பு நோயாக்கி, பாண்டிய மன்னருக்கு அனுப்பிவிட்டார்.
வெப்பு நோயைத் தீர்க்க சமணர்கள் எவ்வளவோ முயன்றும்
முடியவில்லை.
பாண்டியரின் வெப்புநோயைத் சம்பந்தபெருமான் தீர்த்துவைப்பார்
என்று பாண்டிமாதேவி மங்கையற்கரசியார் சொன்னதன் பேரில் அவரைப்
பாண்டியர் வரவழைத்தார்.
பாண்டியனாரின் உடலின் ஒரு பாதியை சமணர்கள் தங்களின் மணி மந்திர ஔஷதங்களால் குணப்படுத்த முயல்வது என்றும் இன்னொரு பாதியை சம்பந்தப்பெருமானார் குணப்படுத்துவது என்பதும் சவால்.
சமணர்கள் முயற்சி செய்த பகுதியில் நோய் அதிகரித்தது.
அப்போது சம்பந்தபெருமானார் மடைப் பள்ளியிலிருந்து அடுப்புச் சாம்பலை எடுத்துவரச்செய்தார்.
அந்தச் சாம்பலை வைத்து 'மந்திரமாவது நீறு' என்று திருநீற்றுத் திருப்பதிகத்தைப் பாடி, அதற்கு உருவேற்றி, பாண்டியனாரின் உடலில் தடவினார். அத்துடன் அந்தப் பாதியிலிருந்து நோய் நீங்கி சமணர்களின் பாதிக்குச் சென்று இன்னும் கடுமையாக மாறியது.
அதன்பின்னர் இன்னொரு பாதியிலும் சாம்பலைத் தடவினார்.
நோய் உடனே அகன்றது.
சமீபகாலம்வரையிலும் மதுரையில் அந்த மடத்தில் மடப்பள்ளிச்
சாம்பலையே திருநீற்றுப் பிரசாதமாகக் கொடுத்துவந்திருக்கிறார்கள்.
இப்போது அந்த வழக்கம் உண்டா என்பது தெரியவில்லை.
மதுரைத் தலத்திலேயே அப்படியொரு வழக்கம் இருந்ததாகவும்
கூறுவார்கள்.
அடுப்படிச் சாம்பலுக்கும் அப்படியொரு மகிமை.
எல்லாமே கைவிசேஷம்தான். நம்பிக்கைதான். பதிகமும் வேலை செய்கிறது. சிவனருள் கைகூடுகிறது.
1.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயன் திருநீறே
மந்திரமாக விளங்குவதும் திருநீறு; தேவர்கள் முதலிய தெய்வங்கள், கணங்களின் மீது விளங்குவதும் நீறு; அழகாக விளங்குவது நீறு; நீறு வணங்கித் துதித்துப் போற்றுதற்கு உரியது; ஆகம தந்திரங்களின் வடிவமாக விளங்குவது நீறு; சமயங்கள், மதங்களின் பொருளாக இருப்பது நீறு; செம்மையான இதழ்கள் கொண்ட வாயை உடைய உமையாகிய அங்கயற்கண்ணியை உடலில் பங்கு வைத்த மங்கைபாகனாகிய
திருவாலவாயனின் திருநீறே
2.
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத்தருவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப்புனல்வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே
வேதத்தின் உள்ளே விரவி நிற்பது நீறு.
கொடிய துன்பத்தைத் தீர்ப்பது நீறு.
மெய்யறிவைத் தருவது நீறு
இழிந்த தன்மையைத் தவிர்ப்பது நீறு
அதன் பெருமைகளை ஓதினால் வேண்டியதைத் தரக்கூடியது
நீறு.
மெய்யாம் தன்மையில் உள்ளது நீறு
மதுரை நகரம் குளுமையான புனல்களால் சூழப்பெற்றது.
அந்த மதுராநாயகனான ஆலவாயானுடைய திருநீறு இப்படிப்பட்டது
திருநீற்றுத் திருப்பதிகம் -#3
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
புத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே
முக்தியை அளிப்பது திருநீறு
முனிவர்கள் அணிந்துகொள்வது திருநீறு
சத்தியப் பொருளாக உள்ளது நீறு. திருநீற்றின்மேல்
ஆணையிட்டுக் கூறும் வழக்கம் இருந்தது.
தக்கவர்களால் புகழப்படுவது நீறு
புத்தியைக் கொடுப்பது திருநீறு
துதிப்பதால் இன்பத்தைத் தருவது திருநீறு
சித்திகளைக் கொடுப்பது திருநீறு
அத்தகையது திருவாலயான் திருநீறே
திருநீற்றுத் திருப்பதிகம் -#4
காண இனியது நீறு, கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு, மதியைத் தருவது நீறு
சேணம் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே
பார்ப்பதற்கு இனிமையானது திருநீறு
தன்னை அணிந்துகொள்வார்க்கு அழகைத் தருவது திருநீறு
விரும்பி அணிந்துகொள்வோர் யாவருக்கும் பெருமையைக்
கொடுப்பது திருநீறு
ஆணவத்தைக் கெடுப்பது திருதிருநீறு
நல்லறிவைக் கொடுப்பது திருநீறு
தேவருலக வழ்வைத் தருவது திருநீறு
திருநீற்றுத் திருப்பதிகம் -#5
பூச இனியது நீறு, புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு, பெருந்தவத்தோர்களுக்கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு, அந்தமதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவாலவாயான் திருநீறே
பூசிக்கொள்வதற்கு இனிமையானது திருநீறு
புண்ணியமாக விளங்குவது திருநீறு
அதன் பெருமையை எடுத்துப்பேச இனிமையாயுள்ளது
திருநீறு
பெரும் தவம் புரிபவர்களுக்குப் பற்றுக்களையும்
ஆசைகளையும் கெடுப்பது திருநீறு
முடிவான பொருளாக உள்ளது திருநீறு
தேசங்கள் முழுவதாலும் புகழப்படுவது திருநீறு
திருவாலவாயன் திருநீறு அப்பேற்பட்டது
திருநீற்றுத் திருப்பதிகம் -#6
அருத்தமாவது நீரு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது நீரு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே
செல்வமாக இருப்பது திருநீறு
வீணான இழிநிலையை மாற்றி இன்பநிலையைத்
தருவது திருநீறு
மனத்துன்பத்தைத் தணிப்பது திருநீறு
தேவருலகை வாழவைப்பது திருநீறு
எக்காரியத்துக்கும் பொருந்தி நிற்பது திருநீறு
புண்ணியம் செய்ய்பவர்கள் பூசிக்கொள்வது திருநீறு
லட்சுமி வசிக்கும் மாளிகைகள் சூழ்ந்துள்ள திருவாலவாயான்
திருநீறே
திருந்நீற்றுத் திருப்பதிகம் -#7
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொருதரு சூலத்து ஆலவாயான் திருநீறே
திரிபுரங்களை அழித்தது திருநீறு.
(திரிபுரங்களைப் பற்றியும் அவற்றை சிவபெருமான்
அழித்த கதையையும் கீழ்க்கண்ட இடத்தில் காணலாம் -
<தமிழ்>
http://www.visvacomplex.com/Thiripura_SammAram1.html
<இங்கிலீஷ்>
http://www.visvacomplex.com/Thiripura_Samharam1%28E%29.html
இம்மை மறுமை இன்பங்களுக்கு உரியது திருநீறு
பழக்கத்தில் அணியப்படுவது திருநீறு
செல்வமாக உள்ளதுடன் வேறு எல்லாப்பேறுகளாகவும்
உள்ளது திருநீறு
பேருறக்கத்தைத் தடுப்பது திருநீறு
தூய்மை செய்யும் இத்திருநீறு
இது கூர்மையாக விளங்கும் சூலாயுதத்தைத் தரித்துள்ள
திருஆலவாய்ப் பெருமானது திருநீறாகும்
திருநீற்றுத் திருப்பதிகம் -#8
இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே
இராவணன் அதன் உடம்பில் அணிந்துகொள்வது திருநீறு.
<திருஞானசம்பந்தரின் பதிகங்களில் ஒரு வழக்கு
உண்டு. எட்டாவது பாடலில் ராவணனைக் குறிப்பிடுவார்.
ஒன்பதாவது பாடலில் திருமாலும் பிரம்மனும் சிவபெருமானுடைய
அடியையும் முடியையும் காணாத விஷயத்தைக் குறிப்பிடுவார்.
பத்தாவது பாட்டில் சமணர்களையும் பௌத்தர்களையும்
கண்டனம் செய்திருப்பார். ராவணன் மிகச்சிறந்த சிவபக்தன்.
வெல்லப்படமுடியாதவனாக இருந்தவன். அவனுடைய கர்வத்தை
ஒடுக்கி, அவனுக்கு வலுமிக்க வரங்களையும் தந்து அருளியவர்
சிவபெருமான். சிவபக்தனாகிய அவனுடைய உடலில் தரிக்கப்
பட்டிருப்பது திருநீறு.>
இதன் மேல்விளக்கமாகப் பழைய அகத்திய மடல்
ஒன்று:
விஸ்ரவாஸ் என்னும் ரிஷி ஒருவர் இருந்தார்.
அசுரர் குலத்தைச்சேர்ந்த அரசகுமாரி ஒருத்தி அவருடன்
கூடி வலிமை மிக்க மக்களைப் பெற்றாள். அவர்களில் மூத்தவனாகிய
தசகண்டனுக்குப் பத்துத்தலைகளும் இருபது கைகளும்.
அவன் பிரம்மாவை நோக்கி தவமிருந்து வலிமையும் பல
வரங்களையும் பெற்றான்.
அவனுடைய அரைச் சகோதரன் - Half-brother-ஐ அப்படித்
தானே சொல்லவேண்டும் - குபேரன். அவனும் விஸ்ரவாஸ¤க்குப்
பிறந்தவன்தான். ஆனால் தாய் யக்ஷ¢ணி.
விஸ்ரவாஸ் ரொம்பவும் தியாக உணர்வும் பரந்த மனப்பான்மையும்
உள்ளவர். இனவேறுபாடு பார்க்காமல் அசுரப்பெண், யக்ஷப்பெண் என்று
விதைத்துக்கொண்டே போயிருக்கிறார், பாருங்கள்.
குபேரன் சிவபெருமானை நோக்கித் தீவிர தவமிருந்து
லங்காபுரியையும் புஷ்பகவிமானத்தையும் பெற்று சுபிட்சமாக இருந்தான்.
தசகண்டன் அவனை விரட்டிவிட்டு புஷ்பக விமானத்தையும்
லங்காபுரியையும் கைப்பற்றிக்கொண்டு இலங்கேஸ்வரன் ஆனான்.
விரட்டப்பட்ட குபேரன் சிவபெருமானிடம் புலம்பினான். அவர்
அவனுக்கு அளகாபுரி என்னும் பட்டணத்தையும் நவநிதிகளையும்
கொடுத்து, தம்முடைய தோழனாக்கிக் கொண்டார்.
ஒருநாள் தசகண்டன் வடதிசையை நோக்கித் தன் புஷ்பக
விமானத்தில் சென்றான். எதிரில் கயிலை மலை இருந்தது. அதன்மீது
விமானம் பறக்காது. ஏனெனில் அதன்மீது சிவசக்தியர் தம்முடைய
கணங்களுடன் இருந்தனர். ஆகவே கயிலையை அப்படியே பெயர்த்து
எடுத்து அப்புறமாக வைத்துவிட்டு, விமானத்தைச் செலுத்த நினைத்தான்.
சுற்றிச் செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை.
மலையைப் பெயர்க்க முயன்றதுதான் தாமதம். சக்தி சிவனை
பயந்து கட்டிப்பிடித்துக்கொண்டது.
சிவன் கொஞ்சமும் அலட்டிக்காமல் லேசாக, மிக மிக லேசாகத்
தம்முடைய கால் பெருவிரலை ஊன்றினார்.
மலை அப்படியே தசகண்டன்மீது உட்கார்ந்து அவனைப்போட்டு
நசுக்கியது.
வலி தாங்காமல் பயங்கரமாக ஓலமிட்டு அலறினான்.
அதுவரைக்கும் அந்தமாதிரி யாருமே அலறியது கிடையாது.
பல ஆண்டுகள் அவ்வாறு நசுங்கிக் கிடந்து, மிகவும் வருந்திக்
கொண்டிருந்தான். அப்போது ஒரு சிவமுனிவர் சும்மா இருக்கமாட்டாமல்
அவனிடம்வந்து சாமகானப்பிரியனாகிய சிவனை இசையால் போற்றச்
சொன்னார். உடனே தன்னுடைய தலையைக் கொய்து ஒரு கையையும்
பிய்த்து யாழ் செய்து கைநரம்புகளை மீட்டி வாசித்தான்.
மனமகிழ்ந்த சிவபெருமான் அவனை விடுவித்ததுமட்டுமல்லாமல்
முக்கோடி வாழ்நாள் கொண்ட ஆயுளும் பராக்கிரமும் வஜ்ரசரீரமும்
பாசுபதம் முதலிய அஸ்திரங்களும் கொடுத்தார். யாராலும் வெல்லப்பட
முடியாத வாள் ஒன்றையும் கொடுத்தார்.
சக்தி சிவனை எதிர்பாராமல் தழுவி ஆலிங்கனம் செய்தததால்தான்
அதற்கு மூலகாரணனாக இருந்த ராவணனுக்கு இந்த மாதிரியெல்லாம்
கண்டதனமாக வரங்களையெல்லாம் சிவன் அள்ளிக்கொடுத்தார் என்று
அங்கிருந்த பூதங்கள் கிசுகிசுத்தன.
அத்துடனல்லாமல் ஒப்பும் இணையும் இல்லாத அளவுக்கு
அலறியதால் அவனுக்கு ராவணன் என்ற பெயரும் இட்டார்.
'ராவணம்' என்றால் 'அலறல்'.
இருந்தாலும் தம்மைக் கேட்காமல் தன்னிச்சையாக ராவணனுக்கு
யோசனை சொன்ன அந்த சிவமுனிவரை மனிதனாகப் பிறந்து சிவனாகிய
தம்மை மறந்து பிறசமயத்தில் உழன்று மீண்டும் தம்மை அடையுமாறு
செய்தார். அவரும் அவ்வாறே சிவனை மறந்து, பிற சமயத்தில் நுழைந்து,
பின்னர் சிவனருளால் சூலைநோயால் கஷ்டப்பட்டு,
"கூற்றாயினவாறு விலக்கிகிலீர்" என்று சிவனிடம் அடைக்கலம் புகுந்து,
"புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன், பூம்புகலூர் மேவிய புண்ணியனே"
என்றவாறு சிவனோடு சேர்ந்துகொண்டார்.
மனதில் எண்ணப்பட்டதையெல்லாம் தரக்கூடியது திருநீறு
<சிந்தாமணி என்பது தேவலோகத்தில் இருக்கக்கூடியது.
மனதில் எதை நினக்கிறோமோ அதைக் கொடுக்கும்
சக்தி படைத்தது. கற்பக தரு எனப்படும் தெய்வீக மரமும்
உண்டு. அதனடியில் இருந்து நினைக்கும் பொருள்களைக்
கொடுக்கும்>.
பராசக்தியின் தன்மையாயிருப்பது திருநீறு
<பராவணம் - பரா வண்ணம்; பரா என்பது பரையாகிய ஆதி
பரம்பொருளைக் குறிக்கும். பரையின் வண்ணம். சிவனும்
பரையும் ஒன்றேதான். சிவனின் அருட்சக்தி பரை. இறைவனின்
திருவருள் பராசக்தி>
அணிந்துகொள்வாருடைய பாவத்தைப் போக்குவது
திருநீறு
அனைத்தையும் தாங்கி நிற்கும் ப்ருதிவி தத்துவமாக இருப்பது
திருநீறு.
<தராவணம் - தரை வண்ணம்>
தத்துவங்களாக விளங்குவது திருநீறு
பாம்புகள் வணங்கும் திருமேனியுடைய ஆலவாயான் திருநீறு
இப்படிப்பட்டது.
திருநீற்றுத் திருப்பதிகம் -#9
மாலொடு அயனறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே
திருமாலும் பிரம்மனும் அறியமுடியாத சிறப்பினையும்
உடையது திருநீறு
மேலே உள்ள விண்ணுலகங்களில் வசிக்கும் தேவர்கள்
தங்கள் உடலில் அணிந்திருப்பது திருநீறு
பொருந்துமாறு உடம்பில் ஏற்படும் துன்பங்களைத் தீர்க்கக்
கூடிய இன்பத்தைத் தருவது திருநீறு
ஆலஹாலம் என்னும் விஷத்தை எடுத்து உண்டு, தம்முடைய
மிடற்றில் அடக்கிக்கொண்ட திருவாலவாயானுடைய திருநீறு
இப்பெருமைகளைக் கொண்டது.
திருநீற்றுத் திருப்பதிகம் - #10
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே
குண்டிகையாகிய நீர்ப்பாத்திரத்தைக் கையில் தாங்கிய
சமணர்களோடு பௌத்தர்களுடைய கூட்டமும் கண்டு
கண் திகைக்குமாறு செய்வது திருநீறு
நினைப்பதற்கு இனியது திருநீறு
எட்டுத் திசைகளிலும் இருக்கும் - மெய்ப்பொருளைத்
தேடிக் கண்டவர்களால் புகழ்ந்து பரவப்படுவது திருநீறு
பிரபஞ்சத்தில் இருக்கும் பற்பல அண்டங்களில் இருப்பவர்களால்
பணிந்து ஏத்தப்படும் திருஆலவாயான் திருநீறு அப்படிப்பட்டது.
திருநீற்றுத் திருப்பதிகம்
திருக்கடைக்காப்பு
திருச்சிற்றம்பலம்
ஆற்றும் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
வல்லமையும் வெற்றியும் உடைய காளையின் மீது
எழுந்தருளியிருக்கும் ஆலவாயானுடைய திருநீற்றின்
பெருமையைச் சீர்காழியில் வாழும் பூசுரனாகிய
ஞானசம்பந்தனாகிய நான் துதித்துத் தெளிந்து -
பாண்டியனின் உடலில் பொருந்திய வெப்பு நோயும் கூனும்
பிறவிப்பிணியும் ஒழியுமாறு கூறிய இந்தப் பத்துப் பாடல்களையும்
நன்கு பயில்கின்றவர்கள் எல்லா நலன்களுக்கும் உரியவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Monday, December 2, 2013
Tuesday, November 26, 2013
Subscribe to:
Posts (Atom)























pallavas
